ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் வருமான வரி செலுத்துவோர் கூடுதலாக ரூ.6000 வரை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


ஆதார் - பான் இணைப்பு:


மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்ட் உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான கால அவகாசம் கடந்த ஜுன் 30ம் தேதி நிறைவடைந்தது. ஏற்கனவே பலமுறை இதற்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்த நிலையில், இந்த முறை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால், ஜுன் 30ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்ட்கள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன.


அடுத்து என்ன?


அரசு உத்தரவின்படி ஆதாருடன் இணைக்க தவறியவர்களின் பான் கார்ட் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன. அவற்றை மீண்டும் செயல்பட வைக்க ரூ.1000 அபராதமாக செலுத்த வேண்டி உள்ளது. அதோடு, அவ்வாறு அபாரதம் செலுத்தப்பட்டாலும், செயலிழந்த பான் கார்ட்களை அடுத்த 30 நாட்கள் வரையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாதிப்புகள் என்ன?


பான் - கார்ட்கள் செயலிழக்க தொடங்கி இருந்தால் அதனால் பாதிக்கப்படுவோர்,  கட்டாய பான் எண் தேவைப்படும் குறிப்பிட்ட வங்கி உள்ளிட்ட சேவைகளை அணுக முடியாது. அதோடு, தனிநபர் யாரேனும் இதுவரை வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவில்லை என்றால், அவர்கள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்த பின்னரே வருமான வரிக்கணக்கை கூட தாக்கல் செய்ய முடியும். வருமான வரியின் ரிட்டர்ன்ஸை பெற முடியாது. அதிகப்படியான வரிகள் பிடித்தம் செய்யப்படும்.


ரூ.6000 கூடுதல் செலவு:


வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜுலை 31ம் தேதி தான் கடைசி நாள். ஆனால், பான் கார்ட் இன்றி வருமான வரியை செலுத்த முடியாது. ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாததால் பான் கார்ட்கள் தற்போது செயலிழந்து இருந்தால், அபராதத் தொகையான ரூ.1000 செலுத்தினால் கூட அது மீண்டும் செயல்பட ஒரு மாதமாகும். அதன்பிறகே அவர்களால் வருமான வரி தாக்கல் செய்யப்படும். அவ்வாறு, ஜுலை 31ம் தேதிக்குப் பின் தாமதமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் நபர்கள் ரூ.5 லட்சத்திற்கு அதிகமான வருமானம் கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். ஒருவேளை ரூ.5 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருவாய் கொண்டவர்களாக இருப்பின் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இதன் மூலம், பொதுமக்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.