Just In





ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட 2 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. உலகிலேயே 4-வது நாடாக இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது.

விண்வெளியில் செய்கைக்கோள்கள் அல்லது விண்கலன்களை இணைக்கும் வல்லமையை, இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் பெற்றிருந்தன. தற்போது, நான்காவது நாடாக இந்தியா அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இஸ்ரோ செய்த சாதனை குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் Spadex Docking திட்டம்
விண்வெளியில் தனித்தனியாக பறக்கும் இரண்டு வாகனங்கள் அல்லது செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியே டாக்கிங் எனப்படும். இந்த டாக்கிங் பணி என்பது மிகவும் சிக்கலான மற்றும் கடினமான ஒரு பணியாகும். இத்தகைய பணியை இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் செய்துள்ளன. அந்த வரிசையில் இணைவதற்காக, இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கிய திட்டம்தான் Spadex Docking Mission. அதன்படி, 2024 டிசம்பர் 30ம் தேதி, பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம், SDX01(Chaser), SDX02(Target) ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

வெற்றிகரமாக டாக்கிங் செய்த இஸ்ரோ
இந்த டாக்கிங் பணி ஏற்கனவே சில நாட்களுக்கு முன் நடைபெற இருந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் அந்த பணி நிறுத்தப்பட்டது. இரண்டு செயற்கைக்கோள்களும் 3 மீட்டர் இடைவெளியில் கொண்டுவரப்பட்டு, பின்னர் பின்னோக்கி பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்தப்பட்டன. இந்த நிலையில், இன்று(16.01.24) டாக்கிங் பணியை வெற்றிகரமாக இஸ்ரோ முடித்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2 செய்கைக்கோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாகவும், இது ஒரு வரலாற்று தருணம் எனவும் இஸ்ரோ பதிவிட்டுள்ளது. மேலும், அவற்றை மீண்டும் தனித்தனியாக பிரிக்கும் பணி சில நாட்களில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
செயற்கைக்கோள்களின் இணைப்பு பணியை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மேலும், வரும் ஆண்டுகளில், இந்தியாவின் விண்வெளி பயண லட்சியங்களுக்கு இது ஒரு முக்கியமான படி என்றும் அவர் கூறியுள்ளார்.