இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளின் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு மற்றும் அட்டவணை தயாரிப்பு (Chart Preparation) முறையில் மிக முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்திய ரயில்வே போக்குவரத்து என்பது தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் போக்குவரத்து முறைமைகளில் மிக முக்கியமான ஒன்றாகும். குறைந்த கட்டணம், பாதுகாப்பு, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ரயில்வே போக்குவரத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய ரயில்வேயில் முக்கிய மாற்றம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
4 மணி நேரம் முன்பு முன்பதிவு நிலை அட்டவணை
பொதுவாக ரயில் நிலையங்களில் இருந்து ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்புதான் டிக்கெட் முன்பதிவு நிலை (Chart Preparation) அடங்கிய அட்டவணை வெளியிடப்படும். ஆனால், இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் தங்கள் முன்பதிவு நிலையை அறிந்து கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.
புதிய நடைமுறை விவரங்கள்
- காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை, அதற்கு முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.
- மற்ற நேரங்களில் புறப்படும் ரயில்களுக்கு, அவை புறப்படும் நேரத்திற்கு 10 மணி நேரம் முன்னதாகவே முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்.
காரணம் என்ன?
காத்திருப்போர் பட்டியலில் (Waiting List) உள்ள பயணிகள், கடைசி நேரத்தில் டிக்கெட் உறுதி ஆகாத பட்சத்திலோ அல்லது ரத்தாகும் சூழலிலோ சிரமப்படுகின்றனர். இதனால், அவர்கள் தங்கள் பயணத் திட்டத்தை முன்கூட்டியே மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும், பயணிகளுக்குப் போதிய கால அவகாசம் அளிக்கும் வகையிலும் இந்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ரயில் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை ரயில்வே வாரிய பயணிகள் மார்க்கெட்டிங் இயக்குநர் சஞ்சய் மனோச்சா வெளியிட்டுள்ளார்.