ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் திடீரென 60 நாட்களாகக் குறைக்கப்பட்டு உள்ளதாக, இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. முன்னதாக முன்பதிவு காலம் 120 நாட்களாக இருந்த நிலையில் 60 நாட்களாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் முன்பதிவுக் காலம் என்ற அளவில் மாற்றம் எதுவும் இல்லை எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


உயர்த்தப்பட்ட முன்பதிவு கால அளவு


முன்னதாக 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 120 நாட்களாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் Advance Reservation Period எனப்படும் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களுக்குக் குறைக்கப்பட்டு உள்ளது. 




ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் நிலை என்ன?


அதே நேரத்தில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தனர். இந்த டிக்கெட்டுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் அனைத்தும் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






 


அதேபோல பகல் நேரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களான தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிர்வாகக் காரணங்களுக்காக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.