ஐக்கிய அரபு அமீரகத்தின்  தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்,  பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  நேற்று அதாவது ஜூலை 15ஆம் தேதி அபுதாபியில் சந்தித்தனர்.


கடந்த எட்டு ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர்  நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள  ஐந்தாவது பயணம் ஆகும். பிரதமர் மோடி கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம்  ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றபோது, அபுதாபியில்  ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து தமது வாழ்த்துகளைத் தெரிவிக்க, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக அவர் பதவியேற்றார். 34 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி பெற்றார். இந்தப் பயணத்தைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவிற்கு வருகை தந்தார், பின்னர் 2017 ஆம் ஆண்டில், இந்தியாவின் குடியரசு தின விழாவில்  ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தலைமை விருந்தினராக இருந்தார். மேலும், 2017 இல்  ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் இந்தியா வருகையின் போது இந்தியா - ஐக்கிய அரபு அமீரக  உறவு,  முறைப்படி ஒரு விரிவான உத்திபூர்வ கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்டது.


ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா உறவுகள் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர். இந்தியா-யுஏஇ வர்த்தகம் 2022 இல் 85 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது, இது 2022-23 ஆம் ஆண்டிற்கான  இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும், இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாகவும் யுஏஇ மாறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின்  இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா உள்ளது. 2022 பிப்ரவரியில் , ஐக்கிய அரபு அமீரகத்தின்  விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்ட முதல் நாடு இந்தியா ஆனது. மே 1, 2022 அன்று இந்த ஒப்பந்தம்  நடைமுறைக்கு வந்ததில் இருந்து இருதரப்பு வர்த்தகம் தோராயமாக 15% அதிகரித்துள்ளது.


2023-ல் இரு நாடுகளும் ஆற்றிய குறிப்பிடத்தக்க உலகளாவிய பங்களிப்பை தலைவர்கள் குறிப்பிட்டனர், ஜி20-ன் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு, சிஓபி 28-ன் ஐக்கிய அரபு அமீரகத் தலைமைப் பொறுப்பு ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டினர். 2023 ஜனவரியில் இந்தியாவினால் வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சிமாநாடு நடத்தப்பட்டதை ஐக்கிய அரபு அமீரகம்  பாராட்டியது. சிஓபி28-ல் உலகளாவிய தெற்கின் நலன்களை ஊக்குவிப்பதற்கும் COP28 ஐ "சிஓபி நடவடிக்கை" ஆக்கியதற்கும் இந்தியத் தரப்பு பாராட்டு தெரிவித்தது. ஐ2யு2, ஐக்கிய அரபு அமீரகம் -ஃபிரான்ஸ்-இந்தியா முத்தரப்பு ஒத்துழைப்பு முயற்சி போன்ற பன்முக அரங்கங்களில் மேலும் ஒத்துழைப்பை இரு தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.இத்தகைய தளங்கள் இரு நாடுகளுக்கும் கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு உயர்த்த அதிக வாய்ப்புகளை வழங்குவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.


நேற்று, அபுதாபியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  பின்வரும் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டதைப் பார்வையிட்டனர்.  இருநாடுகளும் ஒரு கட்டமைப்பை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்தந்த மத்திய வங்கிகளின் ஆளுநர்களால் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களின் (INR-AED) பயன்பாட்டை ஊக்குவிக்க வகை செய்யும்.


அந்தந்த மத்திய வங்கிகளின் ஆளுநர்களால் பணம் செலுத்துதல் மற்றும் செய்தி அனுப்புதல் முறைகளை இணைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


 அபுதாபியில் தில்லி-இந்திய தொழில்நுட்பக் கழகத்தை நிறுவும்  திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


இருதரப்பு வர்த்தகத்தில்  இரு நாடுகளுக்கும் இடையே உள்ளூர் நாணயத் தீர்வு முறையை உருவாக்குவது பரஸ்பர நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் என்று தலைவர்கள் விவரித்தனர்.  இது இரு நாடுகளிலும் உள்ள பொருளாதாரங்களின் வலுவான தன்மையைப் பிரதிபலிக்கும் என்பதுடன்,  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார ஈடுபாட்டை மேம்படுத்தும். இரு நாடுகளுக்கும்  இடையிலான எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை மிகவும் திறம்பட செயல்படுத்த, உடனடி கட்டண முறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை  செயல்படுத்த  தலைவர்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இத்தகைய ஒத்துழைப்பில் உள்நாட்டு அட்டை திட்டங்களை பரஸ்பரம் ஏற்றுக்கொள்வதும் அடங்கும். இந்த அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, இரு நாடுகளின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நலனுக்காக கட்டணச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும்.


இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் தீர்மானத்தை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். இந்தச் சூழலில், இருதரப்பு உயர்மட்ட கூட்டுப் பணிக்குழுவின் முயற்சிகளை அவர்கள் பாராட்டினர். 2021-2022 இல் இருந்த ஏழாவது இடத்துடன் ஒப்பிடுகையில், 2022-2023 இல் இந்தியாவில் நான்காவது பெரிய முதலீட்டாளராக ஐக்கிய அரபு அமீரகம்  ஆனது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அபுதாபி முதலீட்டு ஆணையத்தின்  திட்டத்தை அடுத்த சில மாதங்களில் குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் (கிப்ட் சிட்டி ) நிறுவுவதை அவர்கள் பாராட்டினர். இது இந்தியாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான முதலீட்டு வாய்ப்புகளை மேலும் எளிதாக்கும்.


அபுதாபியில் ஐஐடி தில்லியின்  கிளையை நிறுவுவதற்காக இந்திய கல்வி அமைச்சகம், ஐஐடி தில்லி மற்றும் அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை இடையேயான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரியில், இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற மெய்நிகர் உச்சி மாநாட்டின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐஐடி-யின் கிளையை அமைக்க ஒப்புக்கொண்டனர். இதனை நனவாக்க இரு தரப்பினரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அயராது உழைத்துள்ளனர். இதற்கு தங்கள் ஒப்புதலைத் தெரிவித்த இரு நாட்டுத் தலைவர்கள், ஐஐடி தில்லி - அபுதாபி 2024 ஜனவரி-க்குள் ஆற்றல் மாற்றம் மற்றும் நிலைத்தன்மையில் முதுகலை பாடத் திட்டத்துடன் செயல்படத் தொடங்கும் என்று அறிவித்தனர். பிற இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புகள் செப்டம்பர் 2024 முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிலையான ஆற்றல், காலநிலை ஆய்வுகள் மற்றும் தரவு அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மையங்களும் நிறுவப்படவுள்ளன.


ஆற்றல் துறையில் எண்ணெய் & எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரண்டிலும் இருதரப்பு கூட்டுறவை மேம்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர். பசுமை ஹைட்ரஜன், சூரிய ஆற்றல் மற்றும் (கிரிட்) மின் தொகுப்பு இணைப்பு ஆகியவற்றில் இரு தரப்பும் தங்கள் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும். இந்தியாவின் பெட்ரோலிய இருப்புத் திட்டம் உட்பட ஆற்றல் துறையில் முதலீட்டை அதிகரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.


காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். குறிப்பாக, இந்தியா ஜி-20 நாடுகளுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் சிஓபி-28-ற்கும் தலைமை வகிக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிஓபி-28 மாநாட்டை வெற்றியடையச் செய்ய இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு அவர்கள் செய்தனர்.


உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உணவு விநியோகச் சங்கிலியை வலுவாக்கும் வகையில், உணவு மற்றும் விவசாய வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் இரு தலைவர்களும் தங்களது உறுதியை வெளிப்படுத்தினர்.


இந்தப் பகுதியில் உள்ள திட்டங்களை முன்கூட்டியே செயல்படுத்துவதற்காக பல்வேறு இந்திய பங்குதாரர்களுடன் ஐக்கிய அரபு அமீரகம் தனது ஆலோசனைகளை விரைவாக நிறைவு செய்யும்.


சுகாதாரத்துறையின் முக்கியத்துவம் குறித்து ஆலோசித்த இரு தலைவர்கள், தற்போதுள்ள சுகாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் இருதரப்பு மற்றும் மூன்றாம் நாடுகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்தனர்.


தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளின் மூலம் சர்வதேச சுகாதார விநியோகச் சங்கிலியின் இரு நாடுகளும் முன்னிலை பெறுவதற்கு உள்ள சாத்தியங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் வளர்ந்து வரும் சுகாதார உள்கட்டமைப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவிற்கான பல காரணங்களில், இரு நாட்டு மக்களுக்கு இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான தொடர்பே மிக முக்கியமானது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்திய புலம்பெயர்ந்தோர் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாகவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் பாராட்டு தெரிவித்தது.


இரு நாடுகளின் செழிப்பையும் மேம்படுத்தும் வகையில் கடல்சார் பாதுகாப்பையும், இணைப்பையும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பாதுகாப்பு பரிமாற்றங்கள், அனுபவங்களைப் பகிர்தல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.


பிராந்திய மற்றும் சர்வதேச அளவில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வடிவங்களிலும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தங்களது உறுதியை தலைவர்கள் மீண்டும் வெளிப்படுத்தினர். பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரானப் போராட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர். இந்தச் சூழலில், மக்களிடையே அமைதி, சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். அனைத்து வகையான தீவிரவாதம், வெறுப்புப் பேச்சு, பாகுபாடு ஆகியவற்றை கைவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.


இரு தலைவர்களும் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, நியாயமான விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை மேம்படுத்த ஒன்றுபட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தனர். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விவகாரங்களில், குறிப்பாக 2022-ம் ஆண்டு இரு நாடுகளும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர்களாக பணியாற்றிய போது, இரு தரப்புக்கும் இடையே இருந்த ஒருங்கிணைப்புக்கு இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக ஐக்கிய அரபு அமீரகம் இருந்த காலத்தில், அதன் சாதனைகளை பிரதமர் மோடி பாராட்டினார். சீர்திருத்தப்பட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சியை ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவளித்தது.


தனது குழுவினருக்கு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அளித்த விருந்தோம்பலுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். 2023 செப்டம்பர் 9-10 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெறும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பங்கேற்பதை பிரதமர் மோடி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.


இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கும், ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்வதற்கும், பிராந்தியத்திலும், சர்வதேச அளவிலும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கான தங்களது நிலையையும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.