India Pakistan Tension: அம்பலமான நாடகம்! தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவம் - ஆத்திரத்தில் இந்தியா
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா அழித்த தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கேற்ற புகைப்படம் இந்திய மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடு, இந்தியாவின் அண்டை நாடு என பெயர் பெற்ற பாகிஸ்தானின் மீது பல காலமாக தீவிரவாத்திற்கு ஆதரவு அளிப்பதாக உலக நாடுகள் பலவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தியாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் சடலத்தின் மீது பாகிஸ்தான் தேசிய கொடி:
இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்திய அரசு உறுதியாக நம்பியது. இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் 100 பேர் உயிரிழந்திருக்கும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாதிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த தீவிரவாதிகளுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. அதில் அவர்களது உடல்கள் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளின் மீது பாகிஸ்தானின் தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது.
ராணுவத்தினர் பங்கேற்பு:
மேலும், தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தினர் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இது இந்திய அரசு மத்தியிலும் இந்திய மக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூர், முரிட்கே மற்றும் முசாபராபாத்தில் நடந்த இந்த இறுதிச்சடங்குகளில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அம்பலம்:
முரிட்கேவில் நடந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தீவிரவாதி ஹபீஸ் அப்துல் ராஃப்பின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி இந்திய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கேற்றிருப்பது உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தானுக்கு பின்னடைவையும் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகள் உடலுக்கு பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை அணிவித்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.





















