Trump Tariff: தனக்கே ஆப்படிச்சுகிட்ட ட்ரம்ப் - வரியால் இந்தியா, சீனா ஹாப்பி - சிக்கிய இங்கிலாந்து, ஐரோப்பா ஷாக்
Trump Tariff: சுமையாக மாறும் என கருதப்பட்ட ட்ரம்பின் 15 சதவிகித வரி நடவடிக்கை, இந்தியா மற்றும் சீனாவிற்கு சாதகமாக மாறி இருப்பதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trump Tariff: ட்ரம்பின் புதிய 15 சதவிகித வரி நடவடிக்கை இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பெரிய பாதிப்பாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரம்பின் 15% வரி நடவடிக்கை:
உலக நாடுகள் மீது சரிநிகர் வரி விதிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, ட்ரம்பின் 15 சதவிகித வரி அறிவிப்பானது உலக வர்த்தக சூழலை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிய அறிவிப்பால் இந்தியா மற்றும் சீனாவிற்கு மிகப்பெரிய சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும், மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்தும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் முன்னதாக, ஒவ்வொரு நாடுகளுக்கும் வணிக அளவு அடிப்படையில், வித்தியாசமான வரி விகிதங்களை அமெரிக்கா பின்பற்றியது. ஆனால், தற்போது அனைத்து நாடுகளும் ஒரே சீராக 15 சதவிகித வரி செலுத்த வேண்டுமென ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா, சீனாவிற்கான வெற்றி எப்படி?
அவசர கால சட்டத்தை பயன்படுத்தி உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த வரிகளானது செல்லாது என, அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பளித்தது. இதனால் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்தப்படும் வரி விகிதமானது குறைந்துள்ளது. இந்தியா மீது அமெரிக்க விதித்த 50 சதவிகித வரியானது பிப்ரவரி மாத தொடக்கத்தில் 25 சதவிகிதமாக குறைந்தது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை காரணமாக, அது 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால், இந்திய பொருட்களுக்கான வரியானது 15 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கான மிகப்பெரிய லாபமாக கருதப்படுகிறது. இதேபோன்று சீனா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட அமெரிக்காவின் 10 சதவிகித கூடுதல் வரியும் ரத்து செய்யப்பட்டு இருப்பதை, அந்நாடுகள் தங்களுக்கான லாபமாக பார்க்கின்றன.
அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய சந்தைகளான இந்தியா மற்றும் சீனா மீது, கூடுதல் வரியால் அதிக அழுத்தம் செலுத்த ட்ரம்ப் தீவிரம் காட்டினார். ஆனால், அந்த முடிவு தற்போது அவருக்கே மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து..
உலக நாடுகள் மீதான ட்ரம்பின் வரி உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால், மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முதன்மையானதாக உள்ளது. பல நாடுகளை காட்டிலும் குறைவாக அதாவது 10 சதவிகித வரி மட்டுமே, இங்கிலாந்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கான இங்கிலாந்து பொருட்களின் ஏற்றுமதிக்கான செலவு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அதிகரிக்கக் கூடும் என்றும், இதனை குறைக்க வேண்டும் எனவும் இங்கிலாந்து அரசு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தீவிரம் காட்டி வருகிறது. முன்பு செலுத்தப்பட்டதை காட்டிலும் அதிக வரி செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இத்தாலி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.
ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க ஐரோப்பிய யூனியன் பரிசீலனை:
ஐரோப்பிய யுனியன் உடன் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகளை, அமெரிக்கா மதிக்க வேண்டுமென ஐரோப்பிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வர்த்தகக் குழு தலைவர், ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து அதன் வர்த்தகக் கொள்கை குறித்து முழு விவரங்களைப் பெறும் வரை, அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒப்புதல் செயல்முறையை நிறுத்தி வைக்க பரிசீலிக்க திட்டமிட்டுள்ளாராம். அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஐரோப்பிய ஒன்றியம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
























