TN Freedom Fighters: இறந்த பிறகும் நடுங்கவைத்த மருதநாயகம்.. சிப்பாய்க்கலகத்திற்கு முன்னோடியான பூலித்தேவன்!

1850க்கு முன்பான காலக்கட்டத்தில், விடுதலைக்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

Continues below advertisement

இந்திய விடுதலை போராட்ட வரலாற்றையே இரண்டு அத்தியாயங்களாக பிரிக்கலாம். ஒன்று, 1850ஆம் ஆண்டுக்கு முன்பான காலம். அந்த காலக்கட்டத்தில்தான், விடுதலைக்கான முதல் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. 1850ஆம் ஆண்டுக்கு பிறகான காலத்தில் விடுதலைக்கான உணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து, அது பேரியக்கமாக மாறியது. 

Continues below advertisement

1850க்கு முன்பான காலக்கட்டத்தில், விடுதலைக்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

வேலு நாச்சியார்:

ராணி வேலு நாச்சியார் 18ஆம் நூற்றாண்டில் சிவகங்கை அரசியாக இருந்தவர். போரின்போது ஆயுதத்தை எப்படி பயன்படுத்துவது, தற்காப்பு கலைகள், பல்வேறு போர் முறைகளில் பயிற்சி பெற்றவராக திகழ்ந்தார். இவரது கணவர், ஆங்கிலேயர்களுடன் போரிடும்போது கொல்லப்பட்டார். அப்போதுதான், போர்க்களத்தில் நேரடியாக களம் இறங்கினார் வேலு நாச்சியார்.

ஹைதர் அலி, தலித் சமூகத்தை சேர்ந்த தளபதிகள், நிலப்பிரபுக்களின் ஆதரவுடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிச்சலாகப் போராடிய இந்தியாவின் தலைசிறந்த பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர் . இந்திய வரலாற்றில் இவரை போதுமான அளவுக்கு ஆவணப்படுத்தவில்லை என வரலாற்றாசிரியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இருப்பினும், தமிழ்நாட்டின் வரலாற்றில் இவருக்கு என தனத்துவமான இடம் வழங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழர்கள் இவரை வீரமங்கை என்று குறிப்பிடுகின்றனர்.

மருது சகோதரர்கள்:

சுதந்திர போராட்ட வரலாற்றில் மகத்தான பங்களிப்பு ஆற்றிய போதிலும், மருது பாண்டியர் சகோதரர்களான வல்ல மருது மற்றும் அவரது இளைய சகோதரர் சின்ன மருது ஆகியோர் இந்திய அளவில் அறியப்படாமல் உள்ளனர். இவர்கள் சிவகங்கை முத்து வடுகரின் தளபதிகள் ஆவர்.

காளையார் கோவில் போரில் சிவகங்கையின் ஆட்சியாளர் கொல்லப்பட்ட பிறகு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணைக்கு கொண்டு வர இந்த இரண்டு சகோதரர்களும் உதவினார்கள். கூடுதலாக, அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக கடும் போரை நடத்தினர். ஆங்கிலேய துருப்புக்களை துரத்தி அடித்தனர்.

ஆரம்ப காலனித்துவ காலத்தில் இந்தியாவில் கொரில்லா போர்முறையை நிறுவிய பெருமை, மருது சகோதரர்களை சேரும். சிவகங்கை சீமை என்ற பெயரில், இவர்களை போற்றும் வகையில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசு இவர்களை கௌரவிக்கும் வகையில் தபால் தலையையும் வெளியிட்டது. மலேசியாவின் கெடாவில் இவர்களுக்கு என ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன்:

262 ஆண்டுகளுக்கு முன், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியில 1760 ஜனவரி 3ஆம் தேதி ஜெகவீரன் - ஆறுமுகத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

சுதந்திரப் போராட்டம் என்றாலே நினைவுக்கு வரும் முதல் பெயர் வீரபாண்டிய கட்டபொம்மன்தான். மதராஸ் மாகாணத்தில் கால்பதித்த ஆங்கிலேயர்கள், தென்னிந்திய பரப்பு முழுவதையும் ஆட்கொள்ளத் துடித்தபோது இந்த மண்ணுக்கு அரணாக நின்று துணிச்சலாக எதிர்த்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் கொடுத்த துணிவால் தென்னிந்தியாவை நிர்வகித்த பல பாளையக்காரர்களும் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள். அதனால் வெள்ளையர்களின் இலக்கானார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

கட்டபொம்மன் மரபுக்கு என மிக நீண்ட வரலாறு உண்டு. இப்போது ஒட்டப்பிடாரம் என அழைக்கப்படும் அழகிய வீரபாண்டியபுரத்தை ஆண்ட ஜெகவீரபாண்டிய நாயக்கரின் அரசவையில் கெட்டிப்பொம்மு என்பவர் இடம்பெற்றிருந்தார். ஜெகவீர பாண்டியனின் நம்பிக்கையைப் பெற்ற கெட்டிபொம்மு ஜெகவீரபாண்டியனுக்குப் பிறகு மன்னராக நியமிக்கப்பட்டார். அவர் மரபில் வந்தவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். 

பூலித்தேவன்:

இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாக கருதப்படுகிறார் பூலித்தேவன். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு' என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

அழகு முத்துக்கோன்:

இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857ஆம் ஆண்டு நடந்ததாக வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் விடுதலை போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.

மருதநாயகம்:

முஹம்மது யூசுப் கான் என்று அழைக்கப்படும் மருதநாயகம், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போராடிய 18ஆம் நூற்றாண்டின் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக் கொள்கைகளிலிருந்து தம்முடைய மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஒரு போர்வீரன். 

உடன் இருந்தவர்களின் துரோகச் செயலால் யூசுப் கான், எதிரிகளின் பிடியில் சிக்கிக்கொண்டார். அதன் பின் மதுரைக் கோட்டைக்குத் தெற்கே உள்ள ஒரு மாமரத்தில் மருதநாயகம் எனப்படும் யூசுப் கான் தூக்கிலிடப்பட்டார். இருமுறை கயிறு அவிழ்ந்தது, மூன்றாவது முறை மருதநாயகத்தின் உயிரை இழுத்துக்கொண்டது. 

இறந்த பின்பு யூசுப் கான் மதுரை மக்களின் முக்கியச் சின்னமாக மாறி விடுவார் என்பதை எண்ணி, யூசுப் கான் தலையை திருச்சிக்கும், கால்களைத் தஞ்சாவூருக்கும் திருவிதாங்கூருக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும் எதிரிகள் அனுப்பிவிட்டனர். உடலை மட்டும் இறந்த இடத்திலேயே புதைத்துவிட்டனர்.

யூசுப் கான் புதைக்கப்பட்ட இடத்தில் ஷேக் இமாம் என்பவர் தர்கா ஒன்றை எழுப்பினார். அது சாஹிப் பள்ளி வாசல் என்று அறியப்படுகிறது. இதைத்தான் கமல்ஹாசன் படமாக எடுக்க விரும்பினார்.

Continues below advertisement