Cabinet Meeting: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை மற்றும் அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.


மத்திய அமைச்சரவை கூட்டம்:


5 மாநில தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காலை 10.30 மணியளவில் தொடங்க உள்ள இந்த கூட்டத்தில், அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 5 மாநில தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, வாக்காளர்களை கவரும் விதமான அறிவிப்புகள் இந்த அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?


அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படலாம்.  ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதியை எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதனால், அதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பு வெளியாகக் கூடும். ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தலாம். அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தில் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


1 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவர்:


மத்திய அரசின் இந்த முடிவால் 47 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். பணவீக்கத்தின் சுமையிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். நவராத்திரி விழா அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்குகிறது, தசரா அக்டோபர் 24 ஆம் தேதி வருகிறது. அதை முன்னிட்டு மத்திய அரசின் பரிசாக இந்த அகவிலைப்படி உயர்வை வழங்க, மோடி தலமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மற்ற விவகாரங்கள்:


அதோடு, இந்தியா - கனடா விவகாரம், நாட்டின் பணவீக்கம், ரூபாயின் மதிப்பு சரிவது, மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும், இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது. பொருளாதாரா விவகாரக் குழுவின் கூட்டமும் நடைபெறுவதால், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


முக்கிய அறிவிப்புகள்:


கடந்த மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தான், மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன. அதற்கு முந்தைய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதனால், இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் பாமர மக்களும்  பயன்படும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.