எச்சரிக்கை அலர்ட்! இடுக்கியில் மண்சரிவு, சுற்றுலா தலங்களில் தடை! உயிரைக் காப்பாற்றிய அதிர்ஷ்டம்
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இன்று முடிவுக்கு வரும் நிலையில் எட்டு மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' எச்சரிக்கை.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இன்று முடிவுக்கு வரும் நிலையில் எட்டு மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்த ஆண்டு மே 24ல் துவங்கியது. இன்றுடன் பருவமழை முடிவுக்கு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில், அடிமாலி பகுதியில் பலத்த மழை பெய்தது.

அதனால் அடிமாலி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமமான மச்சிபிளாவ், சூரகெட்டான்குடியில் நேற்று முன்தினம் இரவு மண்சரிவு ஏற்பட்டது. அதில் அருண் 35, என்பவரின் வீடு சேதமடைந்து, அவர் மண்ணிற்குள் சிக்கினார். தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயமடைந்ததுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது மனைவி, பிள்ளைகள் ஆகியோர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்ததால் தப்பினர். எல்லோ அலர்ட் மாநிலத்தில் திருவனந்தபுரம், இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
கேரள எல்லை மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களான கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. இதேபோல் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைய அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களான இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சுருளி அருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு,தூவானம் அணை மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் அதிக அளவில் பருவ மழை பெய்து அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதேபோல் கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவி, கும்பக்கரை அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.





















