அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இந்தியா கூட்டணி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


பரபரப்பான தேர்தல் களம்:


பாஜகவும், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதல் முயற்சியாக, டெல்லியில் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை நடத்தியது. இதற்கிடையே, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.


இந்த கூட்டத்தில், அதிமுக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்ட போதிலும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கலந்து கொள்ளவில்லை. இதனால், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அக்கட்சி கூட்டணி அமைக்குமா? இல்லையா? என்பதில் தொடர் குழப்பம் நீடித்து வந்தது.


தென்னிந்தியாவை குறிவைக்கும் பாஜக:


இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடா அறிவித்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அந்தர் பல்டி அடித்த மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியானது.


இந்த அறிவிப்பை பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா வெளியிட்டார். பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால், இதை, மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுதி செய்யாமல் இருந்தது.


இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. தேவகவுடாவின் மகனும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எச்.டி. குமாரசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவையும் இன்று பிற்பகல் சந்தித் பேசினார்.


பாஜக கூட்டணியில் இணைந்த தேவகவுடா:


இதை தொடர்ந்து, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தொகுதி பங்கீடு குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து நட்டா வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதள பதிவில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் அங்கம் வகிக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை முழு மனதுடன் வரவேற்கிறோம். 


இது தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும். 'புதிய இந்தியா, வலிமையான இந்தியா' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தும்" என பதிவிட்டுள்ளார்.


கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்டது. அந்த தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்த வாக்குகளில் 9.74 சதவீத வாக்குகளை பெற்றது. இந்தாண்டு மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.