இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் விறகு அடுப்புகளில் இருந்து மாறி கேஸ் அடுப்புகளை பயன்படுத்துகின்றன. உஜ்வாலா போன்ற திட்டங்களும் கேஸ் சிலிண்டர் விநியோக வளர்ச்சியும் இதற்கு ஒரு முக்கிய காரணம். வீடு, கடை, உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் கேஸ் சிலிண்டர்கள் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் கேஸ் சிலிண்டர்களை மிக பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. லேசாக கேஸ் கசிந்தாலும் பல பேரின் உயிரையே பறித்து கொள்ளும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஸ்மார்ட் சிலிண்டர்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

Continues below advertisement

குறிப்பாக நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில், பொதுத்துறை நிறுவனமான ஹெச்பி ஒரு முயற்சியை எடுத்துள்ளது. கேஸ் கசிவை உடனுக்குடன் கண்டறிந்து, பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் வசதியுடன் கூடிய 'ஸ்மார்ட் சிலிண்டர்களை' அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நவீன சிலிண்டர்கள் சாதாரண சிலிண்டர்களை விட அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சிலிண்டரில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால், அதை உடனடியாக கண்டறிந்து அந்த சாதனமே ஒலியின் மூலம் எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.

Continues below advertisement

ஸ்மார்ட் சிலிண்டர்கள் இன்டர்நெட் அல்லது செயலி வசதியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், பயனர் வீட்டில் இல்லாத நேரத்திலும் கேஸ் கசிவு ஏற்பட்டால், அவரது மொபைலுக்கு உடனடி எச்சரிக்கை அனுப்பப்படும். அதே போல கேஸ் தீர்ந்து போவதற்கு முன்பே, சிலிண்டரின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கண்காணித்து, சிலிண்டரை மாற்ற வேண்டிய நேரத்தை பயனர்களுக்கு முன்கூட்டியே நினைவுபடுத்தும் தொழில்நுட்பமும் இதில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகவும் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் ஏற்படும் கசிவுகளை கவனிக்க முடியாத சூழலில், இந்த தொழில்நுட்பம் ஒரு சிறந்த பாதுகாப்பு அரணாக செயல்படும் என கூறப்படுகிறது.

எனவே ஹெச்பி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரும் போது, வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் கேஸ் சிலிண்டர் குறித்த பயம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக செல்லலாம். முதலில் ஹெச்பி நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் விரைவில் குறிப்பிட்ட சில நகரங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.பொதுமக்களிடையே இந்தத் தொழில்நுட்பத்தின் வரவேற்பை பொறுத்து, நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹெச்பி நிறுவனத்தின் இந்தத் திட்டம் வெற்றிபெற்றால், இது மற்ற எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.