புதுச்சேரியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தி முன்மாதிரி கிராமத்திற்கு  சான்றிதழ் வழங்கியுள்ளார் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்




கொரோனாவின் இரண்டாவது அலை தொற்றானது கிராமங்களில் தீவிரம் அடைந்து வருவதால் மாவட்ட வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள கிராமங்களில் கொரோனாதடுப்பு நடவடிக்கைகளில் முதல் கட்டமாக பல்வேறு பயிற்சிகளும் மற்றும் மாபெரும்தடுப்பு ஊசி முகாம்களும் நடத்தப்பட்டன. இரண்டாவது கட்டமாக கொரோனா பற்றிய பல்வேறு பயிற்சிகளுடன் கூடிய 100 சதவீத தடுப்பூசி செலுத்தி முன்மாதிரி கிராமங்களாக செயல்பட புதுவை அரசின் ஊரக வளர்ச்சி துறையின் செயலாளர் ரவிபிரகாஷ் தலைமையில் 100% தடுப்பூசிபோடும் திட்டத்தை மூன்று வட்டாரங்களான வில்லியனூர்,அரியாங்குப்பம் மற்றும் காரைக்காலில் உள்ள கிராமங்களில் 100% கோரோனா தடுப்பூசி செலுத்திய முன்மாதிரி கிராமமாக உருவாக்க அறிவுறுத்தினர். ரவிபிரகாஷ் செயலாளர் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் முன்மாதிரி கிராமங்களாக தலா மூன்று கிராமங்கள் தேர்ந்தெடுத்து அங்குள்ள முதியோர்கள், நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், முன்களப்பணியாளர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்மாதிரி கிராமமாக செயல்படவும். கொரோனா தடுப்பூசி திட்டம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றவும் ஆலோசனை வழங்கப்பட்டது.


கொரோனா தடுப்புஊசி செலுத்திக் கொண்ட முன்மாதிரி கிராமமாக திகழ்வதற்கு அனைத்துவிதமான பயிற்சிகளும், விழிப்புணர்வு முகாம்களும் மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமையின் கீழ் செயல்படும்சுய உதவி குழுக்கள் மற்றும் 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் செயல்படும் முன்களபணியாளர்களான பஞ்சாயத்து அளவிலான சமூக வல்லுனர்கள், கணக்காளர்கள், மற்றும் கிராமரோஸ்கர் சேவாக்கள் மூலமாக நடத்தப்பட்டது. மேலும் அங்கன்வாடி பணியாளர்கள்,செவிலியர்களும் இணைந்து தடுப்பு ஊசியால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி குமாரப்பாளையம், புதுக்குப்பம் கிராம மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.




இக்கிராம மக்கள் 100% கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்காக வழி வகைகள் அனைத்தும் செய்து தரப்பட்டது. 100% கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மகளிர்கய உதவிக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள், மாவட்ட ஆட்சி நிர்வாகம், குடும்ப நலவழித் துறையை சேர்ந்தவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்தவர்கள் முழுமையாக பங்கேற்று இது ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பணியை செவ்வனே செய்து 100%கொரோனா தடுப்பு ஊசிசெலுத்திக் கொண்ட கிராமமாக அங்கீகரிக்கப்படுவதில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்துடன் ஊரகவளர்ச்சி துறையும் பங்கேற்று இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.


புதுவை மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் கீழ்உள்ள வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவகத்திற்கு உட்பட்ட சுத்துகேணி பஞ்சாயத்திலுள்ள குமாரப்பாளையம், புதுக்குப்பம் என்னும் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியினை மண்ணாடிப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் நமசிவாயம் தொடங்கி வைத்தார்.  புதுச்சேரி மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100% தடுப்பூசி எடுத்துக் கொண்ட முதல் கிராமமாக புதுக்குப்பம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுக்குப்பம் கிராம மக்களிடம் வழங்கியுள்ளார்.