ரயில் - நடைமேடை இடையே சிக்கி பெரும் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அன்னவரை பகுதியைச் சேர்ந்த சசிகலா (20). இவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் குண்டூர்-ராயகடா விரைவு ரயிலில் கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார்.


அதன்படி நேற்று முன் தினம் சகிகலா வழக்கம்போல் கல்லூரிக்குச் செல்வதற்காக குண்டூர் - ராயகடா விரைவு ரயிலில் ஏறி துவ்வாடாவுக்கு வந்தார்.  துவ்வாடா ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது ரயில் நிற்பதற்குள் இறங்க முயன்றுள்ளார்.


அப்போது கால் தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் கல்லூரி மாணவியான சசிகலா சிக்கிக் கொண்டார். மாணவியின் கால் தண்டவாளத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த நிலையில் வெளியே வர முடியாமல் அலறித் துடித்த மாணவி குறித்து சக பயணிகள் ரயில்வே அலுவலர்களுக்குத் தெரிவித்தனர்.


தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் படையினரும் பயணிகளும் மாணவியை வெளியே கொண்டுவர முயற்சித்தனர். கடுமையாக முயற்சித்தும் அந்த மாணவியை வெளியே கொண்டுவர முடியாத நிலையில் நடைமேடையின் ஒரு பகுதியை உடைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் மீட்புப்படையினர் போராடினார்.


ஒன்றரை மணி நேரத்துக்கு பின்பு மாணவியை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்றனர். இந்நிலையில், மாணவி சசிகலா சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.


முன்னதாக சசிகலா ரயில் -நடைமேடை இடையே சிக்கித் தவித்த காட்சி இணையத்தில் பகிரப்பட்டு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.


முன்னதாக இதேபோல் கலபுரகி ரயில் நிலையத்தின் நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் பெண் உட்பட இரண்டு பயணிகள் சிக்கிக் கொண்டனர்.  கடந்த வாரம் இரவு ஹுசைன் சாகர் ரயில், 3வது நடைமேடைக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது. தாமதமாக வந்ததால் பெண் உட்பட இரண்டு பயணிகள் முதல் நடைமேடையில் இருந்து இறங்கி மூன்றாவது மேடைக்கு வர முயன்றனர்.


அப்போது சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்தது. உடனடியாக சுதாரித்து கெண்ட இருவரும் நடைமேடைக்கு தண்டவாளத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியில் படுத்துக் கொண்டனர். ரயில் கடந்த பின் மற்ற பயணிகள் அவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.


இதையும் படிங்க: Jignesh Mevani : பொது மக்களிடமே நிதி திரட்டி போட்டியிட்டு, மீண்டும் வென்ற ஜிக்னேஷ் மேவானி...பாஜக சுனாமி எதிர்நீச்சல் செய்து வெற்றி..!