நாற்பது வருட காத்திருப்புக்குப் பிறகு, கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) இருந்து இடம்பெயர்ந்த 63 இந்துக் குடும்பங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு செவ்வாயன்று வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளை வழங்கியது.


ஒவ்வொரு குடும்பத்திற்கும் விவசாய தேவைகளுக்காக இரண்டு ஏக்கர் நிலமும், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் ஒரு வீடும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,  "இந்த குடும்பங்களின் இத்தகைய அவலங்களுக்கு முன்னாள் ஆட்சி செய்த அரசுகளே பொறுப்பு. இந்தக் குடும்பங்கள் அனைத்தும் 1970களில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்து புலம்பெயர்ந்தவர்கள். அதாவது தற்போது பங்களாதேஷ் என்று பெயர் கொண்டுள்ள நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து மீரட் மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபூர் நகரத்தில் உள்ள நூல் ஆலையில் வேலை செய்தனர்"  என்றார். 1984 ஆம் ஆண்டு நூல் ஆலை மூடப்பட்டதாகவும், அவர்களில் சிலருக்கு மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டதாகவும், 65 குடும்பங்கள் தங்கள் மறுவாழ்வுக்காகக் காத்திருந்ததாகவும் யோகி கூறினார். "உங்களது 38 ஆண்டுகால காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துவிட்டது” என்று துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் முன்னிலையில் யோகி ஆதித்யநாத் கூறினார். 



"கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் ரசூலாபாத் பகுதியில் உள்ள 63 குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம், 200 சதுர மீட்டர் வீட்டுமனை பட்டா வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படுகிறது,” என்று மேலும் அவர் கூறினார். ஏழைகளின் துன்பங்கள் ஏன் முன்னாள் ஆண்டவர்கள் கண்களுக்கு தெரியவில்லை என்று கேள்வி கேட்டார். ஏன் அவர்கள் முசாஹர் (எலி உண்பவர்கள்) சாதி மக்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரவில்லை என்றும் கேட்டார். அல்லது கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள வந்தங்கியா பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கான நீதியை ஏன் இன்னும் வழங்கவில்லை என்று கேட்டார். தனது அரசாங்கத்தின் சாதனைகளை மேற்கோள்காட்டி, “வந்தங்கியாவில் உள்ள 38 கிராமங்களை நாங்கள் வருவாய் கிராமங்களாக மாற்றினோம், சுதந்திரத்திற்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் முதல் முறையாக வாக்களிக்க வைத்தோம். ஆங்கிலேயர் காலத்தில் காடு வளர்ப்பு நடவடிக்கைகளுக்காக மியான்மரில் இருந்து கொண்டு வரப்பட்ட வந்தாங்கிய சமூகத்தினர் அதன்பின்னர் எந்தவித நவீன வளர்ச்சியும் இன்றி காடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஏனெனில் அவர்களின் கிராமங்கள் இதுவரை வருவாய் கிராம அந்தஸ்து பெறாததால் அவர்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் சென்று சேராமல் இருந்தது." என்று கூறினார்.



2017 ஆம் ஆண்டு உ.பி முதல்வராக பதவியேற்ற பிறகு ஆதித்யநாத் பல வந்தங்கிய இன மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு வருவாய் கிராம அந்தஸ்தை வழங்கினார். "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியபோது, ​​உ.பி.யிலும் இதுபோன்றவர்களைத் தேடி, அவர்களின் குடும்பங்களைக் கண்டுபிடித்தோம். இந்த திட்டத்தின் கீழ் 63 குடும்பங்கள் பலன் பெறுகின்றன, 400 மக்கள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள்" என்று அவர் கூறினார். இதுவரை 1.08 லட்சம் வீடுகள் அத்தகைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆதித்யநாத்.