Nirmala Sitharaman: பதில் சொல்ல முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன பதிலுக்கு,  எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


நிர்மலா சீதாராமனிடம் கேள்வி:


மும்பையில் `இந்திய நிதிச்சந்தையின் பார்வை' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.  இதில் முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை புரோக்கர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக நீண்ட உரையாற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புரோக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினர். அந்த வகையில் ஒரு புரோக்கர், ``முதலீட்டாளர்கள் அபாயங்களை எதிர்கொண்டு, பணத்தை முதலீடு செய்கின்றனர். ஆனால் அரசு கடுமையான வரிகளை விதிக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அரசு சி.எஸ்.டி, ஐ.சி.எஸ்.டி, முத்திரை தீர்வை, எஸ்.டி.டி, நீண்டகால கேபிடள் கெய்ன் வரி போன்ற வரிகளை விதிக்கிறது. இதனால் அரசு, புரோக்கர்களைவிட அதிகமாக சம்பாதிக்கிறது. முதலீட்டாளர்களும், புரோக்கர்களும் அபாயங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் அரசுக்கு அது போன்ற பிரச்னை இல்லை.


மத்திய அரசு ஸ்லீப்பிங் பார்ட்னரா?


அனைத்து வகையான நிதி முதலீட்டு அபாயங்களையும் நாங்கள்  எதிர்கொள்கிறோம். ஆனால் அனைத்து விதமான லாபங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. நீங்கள் எனது சிலீப்பிங் பார்ட்னர். நான் வேலை செய்யும் பார்ட்னர். ஒரு வீட்டை வாங்குவதற்கு செலுத்த வேண்டிய வரிகள் என்னென்ன? ஸ்டாம்ப் டியூட்டி, ஜிஎஸ்டி போன்ற வரிகள் மூலம் ஒரு வீடு வாங்கினால் எவ்வளவு வரி கட்ட வேண்டும். மும்பையில் ஒரு வாங்கினால் 11 சதவிகிதம் வரி கட்ட வேண்டி உள்ளது. குறைந்த வளங்களே கொண்டுள்ளவர்களுக்கு வீடு வாங்க அரசு எப்படி உதவுகிறது. அரசு போடும் வரிகளை கடந்த ஒரு முதலீட்டாளர் எப்படி செயல்பட முடியும்” என்றார்.






நிர்மலா சீதாராமன் சொன்ன பதில் என்ன?


புரோக்கர் எழுப்பிய இந்த கேள்விகளுக்கு தன்னிடம் பதில் இல்லை என முதலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார். அதன்பிறகு, ஸ்லீப்பிங் பார்ட்னர், இங்கு அமர்ந்து பதில் சொல்லிக்கொண்டிருக்கமாட்டார்' என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதை சொன்னதும் அரங்கில் இருந்த பலரும் சிரித்துள்ளனர். தொடர்ந்து பேசுகையில், ”மோடி அரசு கொண்டு வந்த கொள்கைகளால் நாட்டில் கடந்த 10 ஆண்டில் ஏராளமான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து நாட்டில் 3.74 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிராம சதக் யோஜனா திட்டத்தில் கிராமத்தில் சாலைகளின் அளவு இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தால் நகரங்களில் போக்குவரத்து மேம்பட்டு போக்குவரத்து நெருக்கடி குறைந்து பாதுகாப்பான பயணத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது'' என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


கண்டங்களும், விமர்சனங்களும்:


பொதுமக்கள் வரிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் அமைச்சர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. நிர்மலா சீதாராமனின் பதிலுக்கு சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். அதில் ஒருவர் “நீங்கள் கேட்டது நல்ல கேள்வி, ஆனால் அது என்னை காயப்படுத்தி விட்டது” என நிர்மலா சீதாராமன் பேசுவதாக பதிவிட்டுள்ளார்.