நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்தும், நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் ஒன்று கூடி போராடி வருகின்றனர். குறிப்பாக, கரப்பான் பூச்சி கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அந்த போராட்டத்தை தீவிரமடைய வைத்திருக்கின்றனர். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர் கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் தமிழ்நாட்டிலும் பரவியிருக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் தன்னெழுச்சியாக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடங்கியிருக்கிறது. தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் தமிழ்நாடும் அதன் மாணவர்களும் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் குதித்துள்ளனர்.
வைரலாகும் EXAM வெப் சீரிஸ் பட காட்சிகள்
இதனையடுத்து சமூக வலைதளங்களில் இயக்குநர் சற்குணத்தின் வெப் சீரிஸ் திரைப்படமான EXAM காட்சிகள் வைரலாகத் தொடங்கியிருக்கின்றன. அந்த படமே அரசு தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பானதுதான் என்பதால் அதில் உள்ள காட்சிகளை எடுத்து இளைஞர்களும் மாணவர்களும் தங்கள் போராட்ட கருவியாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது டெல்லியில் போராடும் இளைஞர்களும் EXAM வெப் சீரிஸ் படத்தின் காட்சிகளை தங்களது சமூக வலைதள பக்கங்களிலும், வாட்ஸ்-அப் குழுக்களிலும் பதிவு செய்து, போராட்ட களத்திற்கான தீயை மேலும் உஷ்ணப்படுத்தி வருகின்றனர்.
தொடரும் போராட்டம்
நாடாளுமன்றம் நடைபெற்று வரும் நிலையில், நாளுக்கு நாள் நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தங்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளை செய்யும்போதெல்லாம் அரசு Exam படம் உள்ளிட்ட வீடியோக்களை குழுக்களில் பகிர்ந்து, இந்த போராட்டதின் வீரியம் குறையாமல் மாணவர்கள் பார்த்துகொள்கின்றனர். இளைஞர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட போராட்டம் என்பதால் இதில் ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் இந்த முன்னெடுப்பை கைவிடக் கூடாது என்பதிலும் இளைஞர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் ஆதரவு
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் சதீஷன், கர்நாடக முதல்வர் சீத்தராமையா உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், இன்று நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதோடு, ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களை சந்திக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும், தமிழ்நாட்டிலும் அந்த போராட்டத்தை தீவிரப்படுத்த அவர்கள் ஆயத்தமாகி வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
