ஓட்டுப்பெட்டியில் கிடந்த துண்டு சீட்டு.. படித்து பார்த்து கண் கலங்கிய அதிகாரிகள்!
தெலுங்கானா நகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மற்றுமொரு பரபரப்பு சம்பவமாக வாக்களிப்பதற்காக வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளில் கடிதங்கள் கிடைத்து வருகின்றன

தெலங்கானாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியின்போது நடைபெற்ற விசித்திரமான சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானாவில் உள்ள 116 நகராட்சிகள் மற்றும் ஏழு மாநகராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 116 நகராட்சிகளில் உள்ள 2,569 வார்டுகளிலும் 412 வார்டுகளைக் கொண்ட ஏழு மாநகராட்சிகளிலும் கிட்டதட்ட 73.01% வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் அனைவரும் பிப்ரவரி 16ம் தேதி பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த சம்பவங்கள்
தெலங்கானாவில் உள்ள கரீம்நகர் மாவட்டம் ஹுசுராபாத்தில் வாக்குகளை எண்ண அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மையத்திற்கு வந்தனர். ஆனால் வாக்கு மைய பூட்டின் சாவி காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முடிவுகளை தெரிந்துக் கொள்ள வேட்பாளர்களும், முகவர்களும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருந்தனர். நேரம் செல்ல செல்ல சாவி கிடைத்தபாடில்லை. இதனால் வாக்குசாவடியின் பூட்டை மண்வெட்டியால் உடைத்து வாக்குப் பெட்டிகளை வெளியே எடுத்து ஓட்டுகளை எண்ணத் தொடங்கினர்.
கண்கலங்க வைத்த கடிதம்
தெலுங்கானா நகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மற்றுமொரு பரபரப்பு சம்பவமாக வாக்களிப்பதற்காக வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளில் கடிதங்கள் கிடைத்து வருகின்றன. வாக்காளர்களின் வேதனைகளை வெளிப்படுத்தும் வண்ணம் அவை எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக, 35வது வார்டு வாக்குப் பெட்டியைத் திறந்த அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில், ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காக காங்கிரஸ் அரசிடம் விடுத்த கோரிக்கை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அதில் காங்கிரஸ் அரசாங்கமே, நான் ஓய்வுப்பெற்று 15 மாதங்களாகியும் எங்களுக்கு வர வேண்டிய சலுகை பணம் வரவில்லை. எங்களுக்கு வயதாகி விட்டது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறோம். நாங்கள் இறப்பதற்கு முன் எங்கள் சொந்தப் பணத்தை கொடுத்து விடுங்கள் என காட்டமாக எழுதப்பட்டிருந்தது.
இல்லாத சின்னத்துக்கு ஓட்டு
அதேபோல் நிர்மல் மாவட்டத்தில் பைன்சா நகராட்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு எண்ணப்பட்டு கொண்டிருந்தது. அப்போது 23வது வார்டு வாக்குப் பெட்டியில் ஒரு வாக்குச் சீட்டில் மோதிரம் சின்னம் இருந்தது. உண்மையில் அந்த வார்டில் யாரும் மோதிரம் சின்னத்தில் போட்டியிடவில்லை. இல்லாத ஒரு சின்னம் ஓட்டுப்பெட்டிக்குள் எப்படி வந்திருக்கும் என அங்கிருந்த வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் கோபமாக கேள்வியெழுப்பினர்.
இந்த சம்பவத்தை கண்டித்து வேட்பாளர்களும் அவர்களது முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் சூர்யாபேட்டை நகராட்சித் தேர்தலில் வாக்குகளை எண்ணும் பணியின் போது சில வாக்குச் சீட்டுகளுடன் எழுதப்பட்ட மனுக்களும் கிடைத்தது. அதில் தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சினைகளை வாக்காளர்கள் எழுதி போட்டுள்ளனர். இது இந்திய அரசியலில் அதிக கவனம் பெற்றுள்ளது.























