தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், குருவாயூர் கோயிலுக்கு தங்க கிரீடம் அளித்துள்ளார். இந்த கிரீடம் 32 சவரன் தங்க நகையையும், 14 கிலோ எடைக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக இன்று 14 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க கிரீடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவஞானம் என்பவர் செய்தார். 32 பவுன் எடை கொண்ட தங்க கிரீடம் மற்றும் சந்தனம் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை கோவிலுக்கு வழங்கினர்.






இயந்திரத்தின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். இன்று பகல் 11.35 மணிக்கு துர்கா ஸ்டாலின் கோவிலுக்குள் சென்று இதனை காணிக்கையாக வழங்கினார். முன்னதாக கிரீடம் தயாரிப்பதற்கான அளவு, கோவிலில் இருந்து வாங்கப்பட்டது. துர்கா ஸ்டாலின் ஏற்கனவே பலமுறை குருவாயூர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்துள்ளார்.


கடந்த 2021 ஆம் ஆண்டில், வெளிநாட்டு தொழிலதிபர் பி.ரவி பிள்ளை குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக தங்கக் கிரீடத்தை வழங்கினார். அவரது மகனின் திருமணத்தையொட்டி, 725 கிராம் எடையுள்ள தங்க கிரீடம் காணிக்கையாக வைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூலை மாதம், சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர், குருவாயூர் கோவிலுக்கு அரை கோடிக்கும் அதிகமான தங்கத்தை காணிக்கையாக அளித்துள்ளார். 770 கிராம் எடை கொண்ட இந்த தங்க கட்டியின் மதிப்பு சுமார் ரூ.53 லட்சம் ஆகும்.