குடியரசு தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஜார்கண்ட முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரின் வேட்பு மனுவுக்கு ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.


பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் நட்டா, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் திரௌபதி முர்மு மனுத்தாக்கல் செய்தபோது உடன் இருந்தனர். வேட்பு மனுவை மோடி முதல் ஆளாக முன் மொழிய தேர்தல் அலுவலர் பி.டி. மோடி அதை பெற்று கொண்டார். 


பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர்த்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக சார்பாக மூத்த தலைவர்கள் ஓ. பன்னீர்செல்வம், தம்பிதுரை, ஜக்கிய ஜனதா தளம் சார்பாக ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது உடனிருந்தனர். 


வேட்பு மனுவை மக்கள் பிரதிநிதிகள் 50 பேர் முன்மொழியவும் 50 பேர் வழிமொழியவும் வேண்டும். தேர்தலில் முர்மு வெற்றி பெறும் பட்சத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர், இரண்டாவது பெண் என்ற பெருமையை அவர் பெறுவார். இந்தியாவின் இளம் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெறுவார். முன்னதாக, சஞ்சீவ் ரெட்டி இளம் குடியரசுத் தலைவர் என்ற பெறுமை பெற்றிருந்தார். 


ஒடிசாவின் முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரான முர்மு, 2015 முதல் 2021 வரை பதவி வகித்தார்.


எதிர்க்கட்சி சார்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். ஜூன் 27ஆம் தேதி, அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 18ஆம் தேதி, குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.


பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர்த்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண