நான் மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குச் செல்லவில்லை. உணவுப் பழக்கத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா. 


அண்மையில் சித்தராமையா கொடிபேட் பசவேஸ்வரா கோயிலுக்குச் சென்றார். அங்கு அவர் செல்வதற்கு முன்னர் அசைவ உணவு சாப்பிட்டுச் சென்றார் என்று தகவல் வெளியானது. இது அரசியல் சர்ச்சையுமானது. இந்நிலையில் சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது:


அசைவம் சாப்பிடுவதெல்லாம் ஒரு பிரச்சனையா? உணவு என்பது தனிநபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது அல்லவா? நான் அசைவமும் சாப்பிடுவேன். சைவமும் சாப்பிடுவேன். சிலர் அசைவம் சாப்பிடவே மாட்டார்கள். அது அவர்களின் பழக்கம். பாஜகவுக்கு வேறேதும் வேலை இல்லை என நினைக்கிறேன். அதனால் தான் உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற பிரச்சனைகளைக் கிளப்பி விடுகிறார்கள். என்னைப் பொறுத்து இது பிரச்சனைக்குரிய விஷயமே அல்ல. சிலர் அசைவம் சாப்பிட்டும் கோயிலுக்குச் செல்கின்றனர். சிலர் ஏதும் சாப்பிடாமலும் கோயிலுக்குச் செல்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் சில கோயில்களில் பக்தர்களுக்கு இறைச்சி உணவே பிரசாதமாக வழங்கப்படுகிறது. உங்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால். அன்றைய தினம் நான் அசைவ உணவு சாப்பிடவே இல்லை. எனக்கு வைக்கப்பட்ட உணவில் சிக்கன் கறியும் இருந்தது. மூங்கில் தண்டு கறியும் இருந்தது. நான் அக்கி ரொட்டியும் மூங்கில் கறியும் சாப்பிட்டேன்.





கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா பாஜகவினருக்கு இச்சர்ச்சை தொடர்பாக இன்னொரு கேள்வியும் எழுப்பியிருக்கிறார். அதில், கடவுள் வந்து யாரிடமாவது கோயிலுக்குச் செல்லும் முன் இதைத் தான் சாப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்பினார்.


ஆனால் அப்போதும் பாஜகவினர் சித்தராமையாவை விட்டதாக இல்லை. பாஜக எம்எல்ஏ பசனகவுடா பட்டீல் யத்தானி சித்தராமையாவிடம் நீங்கள் பன்றி இறைச்சி சாப்பிட்டுவிட்டு மசூதி செல்லும் துணிச்சல் உங்களிடம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு சித்தராமையா, நான் கோழி இறைச்சியும், ஆட்டு இறைச்சியும் தான் சாப்பிடுவேன். ஆனால் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை எதிர்ப்பதில்லை. அது அவர்கள் உணவுப் பழக்கம் என்று பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார், தேர்தல் நெருங்குவதால் சித்தராமையா கோயில்களுக்குச் சென்று நாடகம் போட்டு வருகிறார் என்று விமர்சித்திருந்தார்.


அதற்கு சித்தராமையா, நான் கோயில்களுக்குச் செல்கிறேன். ஆனால் கோயிலுக்குச் செல்வதை மட்டுமே நான் வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. கிராம கோயில்களுக்கும் செல்கிறேன் திருப்பதிக்கும் செல்கிறேன். மஹாதேஸ்வரா மலைக்கும் செல்கிறேன். சாமுண்டி மலைக்கும் செல்கிறேன். நான் எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன் என்று கூறியுள்ளார்.