டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.ூ


டெல்லியில் தொடரும் கொலை:


இதைத்தொடர்ந்து, இதேபோன்ற கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்வது மக்களை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஷர்த்தா கொலை வழக்கை போலவே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை அவரது காதலனே கொலை செய்த மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


மேற்கு டெல்லியின் திலக் நகரில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த 35 வயது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறி ஒருவர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளார்.


டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டிக்கொன்ற ஆப்தாப்பின் தாக்கம் இவரிடமும் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட ரேகா ராணியின் தாடையில் கத்திக்குத்து காயங்கள் இருக்கின்றன. கணேஷ் நகரில் உள்ள வாடகை வீட்டில் அவர் தனது 16 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். அங்கிருந்துதான், அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விரிவாக விவரிக்கையில், "ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருந்த மன்பிரீத், 2015 ஆம் ஆண்டு ரேகாவுடன் உறவைத் தொடங்கியுள்ளார். கணேஷ் நகரில் அவருடன் வாழத் தொடங்கினார். இந்த உறவில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக மன்பிரீத் உணரத் தொடங்கினார். இதிலிருந்து தப்பிக்க தனது காதலியை கொல்ல திட்டமிட்டுள்ளார்.


குத்திக்கொலை:


டிசம்பர் 1ஆம் தேதி இரவு, ரேகாவின் மகளுக்கு தூக்க மாத்திரையைக் கொடுத்துவிட்டு, தூங்கிய பிறகு, ரேகாவை கத்தியால் குத்திக் கொன்றார். ரேகாவின் உடலைக் கொன்று வெட்டுவதற்காக கத்தியை வாங்கியதாகவும், ஆனால் ரேகாவின் மகளிடம் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் இருந்ததுள்ளார்.


பல கடத்தல் மற்றும் கொலை வழக்குகளில் மன்பிரீத் தேடப்பட்டு வருகிறார். உயிரிழந்த பெண்ணின் மகள் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 201 (குற்றத்திற்கான ஆதாரங்கள் காணாமல் போக வைத்தது, அல்லது குற்றவாளிக்குத் தவறான தகவல்களை அளித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் ஒரு அதிர்ச்சி தரவை பகிர்ந்துள்ளார். அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.


பெண்களுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறல் எனக் கூறிய அவர், இந்த கொடுமையை சமாளிக்கும் தேசிய செயல் திட்டங்களை செயல்படுத்த அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.