அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.56 கோடி நிதி ஒதுக்கி டெல்லி அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 


நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில், அது ஒருபுறம் வருத்தம் இருந்தாலும் மறுபக்கம் குடும்பத்துடன் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கடைவீதிகளில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 


இப்படியான நிலையில் பண்டிகை நாட்கள் வந்தால் வேலை செய்பவர்கள் எல்லோரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தனியார் நிறுவனங்களில் போனஸ் என்பது கானல் நீர் தான் என்ற நிலையில் அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தியை பண்டிகை வருவதற்கு சில நாட்கள் முன்பு அரசு அறிவிக்கும். அந்த வகையில் டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ‘ டெல்லி அரசில் பணிபுரியக்கூடிய அரசிதழில் பதிவு பெறாத குரூப் பி மற்றும் சி பணியாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்கப்படும். இதன்மூலம் குரூப் பி மற்றும் சி பணியாளர்கள் 80 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்றும், இதற்காக மொத்தம் ரூ.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்தார். மேலும் என்னுடைய  அரசு பணியாளர்களின் வாழ்க்கையை சிறப்படைவதற்கான முயற்சியை எப்போதும் மேற்கொண்டு வருகிறது. இது வரும்காலத்திலும் தொடரும் எனவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.