13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் சமூக வலைத்தளக் கணக்குகள் தொடங்க தடை விதிக்கப்படும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

Continues below advertisement

சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் இந்தியா முதன்மை நாடாக திகழ்கிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். பல வகையான சமூக வலைத்தளங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இதன் மூலம் மோசடியும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக குழந்தைகளை மிரட்டி  பண மோசடி தொடங்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவது வரை பல வகையான குற்ற சம்பவங்கள் நிகழ்கிறது. இப்படியான நிலையில் குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து வருகிறது. 

Continues below advertisement

இப்படியான நிலையில் கோடிக்கணக்கான இளம் தலைமுறையினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் தங்கள் எதிர்கால வாழ்க்கையை பாழ்ப்படுத்தி வருவதாகவும், இதற்கு கடிவாளம் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனிடையே தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 

இதில் பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டாவால் முன்மொழியப்பட்ட இந்த மசோதா நேற்று அறிமுகப்படுத்தப்படவிருந்த இரண்டு தனிநபர் மசோதாக்களில் ஒன்றாகும். ஆனால் கடும் அமளி காரணமாக இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. வரும் வாரத்தில் விவாதம் நடைபெறலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பெற்றோரின் சரிபார்க்கப்பட்ட ஒப்புதல் இல்லாமல் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களில் கணக்குகளை தடை விதிக்கப்படலாம். 

அதுமட்டுமல்லாமல் தளங்கள் சிறார்களைக் கண்காணிப்பது, அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பது அல்லது தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் மூலம் அவர்களைக் குறிவைப்பது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்படலாம். மேலும் இந்த மசோதா திரை நேரத்தைக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கும் பெற்றோர் கட்டுப்பாட்டு டாஷ்போர்டுகளையும் முன்மொழிகிறது. இந்த சட்ட மசோதா 18 வயதுக்குட்பட்ட எவரையும் குழந்தை என வரையறுக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆபாசப் படங்கள், சூதாட்டம் மற்றும் போலிப் பந்தயங்கள், வன்முறை அல்லது தீவிரவாத உள்ளடக்கம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான உள்ளடக்கங்களுக்குக் குழந்தைகள் ஆளாகாமல் தடுக்கவும் தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறது. 

சட்டத்தை மீறும்  சமூக வலைத்தளங்களுக்கு ரூபாய் 10 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம். தொடர்ச்சியாக மீறினால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-இன் கீழ் இந்தியாவில்  சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரை இதுபோன்று 12 சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கெல்லாம் கட்சி பேதமின்றி அனைத்து எம்பிக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் கண்டிப்பாக இந்த மசோதாவும் வெற்றிக்கரமாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.