சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. 


தொடர்ந்து வரும் நக்சல் தாக்குதல்:


குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளில், (நக்சல்) வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. இறப்புகள் (மாவோயிஸ்ட் வன்முறையில்) 70 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட (எண்ணிக்கை) மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன. இருப்பினும், சில பகுதிகளில் அவ்வப்போது நக்சல் தாக்குதல் நடந்து வருகிறது.


இந்த நிலையில், சத்தீஸ்கர் பிஜாப்பூர் - சுக்மா எல்லையில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சுக்மா மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அவர்கள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


நக்சல்கள் நடமாட்டத்தை தடுத்து மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தரும் வகையில், பீஜப்பூர் - சுக்மா எல்லையில் உள்ள தெகல்குடெம் என்ற கிராமத்தில் இன்று புதிய பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டது. முகாம் நிறுவப்பட்ட பிறகு, ஜோனகுடா-அலிகுடா பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


முதன்முறையாக ஏற்றப்பட்ட இந்திய மூவர்ணக் கொடி:


கோப்ரா/எஸ்டிஎஃப்/டிஆர்ஜி படை மீது ​​மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தாக்குதல் நடத்திவிட்டு, மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர். இதில், காயமடைந்த 14 பாதுகாப்புப் படையினரும் உயர் சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இந்த மாத தொடக்கத்தில், நக்சல்களின் கோட்டை என கருதப்படும் சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில் இரண்டு போலீஸ் முகாம்களை பாதுகாப்புப் படையினர் அமைத்தனர். இதை தொடர்ந்து, குடியரசு தினத்தன்று, சுக்மா-பிஜப்பூர் பகுதியில் முதன்முறையாக இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.


சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் இடதுசாரி தீவிரவாதம் (LWE) தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் ஒரு ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதில் பேசிய அவர், "இடதுசாரி தீவிரவாதம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்.


கடந்த நாற்பது ஆண்டுகளிலேயே 2022ஆம் ஆண்டுதான், நக்சல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மிகக் குறைவான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இறப்புகள் பதிவாகியுள்ளது. நக்சலிசம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு. அதன் அனைத்து வடிவங்களிலும் அதை வேரோடு பிடுங்குவதில் நாம் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.


இதையும் படிக்க: Blue Star Ashok Selvan: பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பீங்களா? வானத்துக்கு கீழ எல்லாம் சமம் - அசோக் செல்வன் கருத்து