நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம்.


முக்கியமாக நிலவின் தென்துருவத்தில் மேற்பரப்பில் சில கனிமங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளது. அதாவது, நிலவில்  சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது.


வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன.  விண்கலத்தில் அனுப்பப்பட்ட ரோவர், 9 நாட்கள் நிலவை சுற்றி வலம் வந்தது. அதையடுத்து வரும் 15 நாட்கள் இரவு என்பதால் ரோவர் மற்றும் லேண்டரின் செயல்பாடுகள் செயலிழந்தது.


15 நாட்களுக்கு பின் மீண்டும் சூரிய ஒளி நிலவின் மீது படும்போது இவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இஸ்ரோ அதிகாரியின் கூற்றுப்படி, கட்டுப்பாட்டு மையம் செப்டம்பர் 22 ஆம் தேதி அதாவது இன்று, உகந்த சூரிய ஒளி நிலவில் இருக்கும் நிலையில் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது சூரிய ஒளி நிலவின் மீது படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அளவு வெப்பநிலை அடைந்த உடன் சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் மற்றும் லேண்டர் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  லேண்டர் மற்றும் ரோவர் முழுமையாக செயல்பட்டால் குறைந்தது இன்னும் 14 பூமி நாட்களுக்கு தொடர்ந்து செயல்பட முடியும் என்றும் அறிவியல் ரீதியான தகவல்களை சேகரித்து வழங்கும் என தெரிவித்துள்ளது.  இன்று அல்லது நாளை இல்லையென்றால் அடுத்த 2 நாட்களில் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.


நாம் வசிக்கக்கூடிய பூமியை பொறுத்தவரை ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்று குறிக்கிறது. ஆனால் நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கிறது. நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் பகலும், அடுத்த 14 நாட்கள் இரவாகவும் இருக்கும். இதனால் அங்கு ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களுக்கு சமமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தான் பகல் தொடங்கும் நாளில் லேண்டரை நிலவில் விஞ்ஞானிகள் தரையிறக்கினர். அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை பயன்படுத்தி ரோவர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.


நிலவின்  மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளும் நிலவின் பகல்பொழுதில் 14 நாட்களுக்குள் முடிவிடக்கூடிய வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 14 நாட்கள் இரவாக இருக்ககூடிய நிலையில், லேண்டர் கருவிக்கு சூரிய ஒளிக் கிடைக்காது.  இரவு நீடிக்கும் 14 நாட்களில் நிலவும் உறைபனிக் குளிர் காரணமாக, கருவிகளின் பாகங்களில் விரிசல்கள் ஏற்படலாம். இதனால், லேண்டர், ரோவர் கருவிகள் இயங்காமல் போகவும் வாய்ப்பிருந்தது. இதன் காரணமாக தான் லேண்டர் மற்றும் ரோவர் கருவி நித்திரைக்கு கொண்டுச் சென்று மீண்டும் செயல்பாட்டிற்கு  கொண்டு வரப்படுகிறது.