சந்தியராயன் 3 தரையிறங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திராயன் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை சுமார் 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. 


அனைவரின் வாழ்த்துகளுக்கும் நேர்மறை சிந்தனைகளுக்கும் நன்றி. 


அனைவரும் இஸ்ரோ இணையதளம் https://isro.gov.in
யூடியூபில் https://youtube.com/watch?v=DLA_64yz8Ss என்ற முகவரியிலும்
ஃபேஸ்புக்கில் https://facebook.com/ISRO என்ற முகவரியிலும்
டிடி நேஷனல் தொலைக்காட்சியிலும்


ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.27 மணியில் இருந்து லைவைக் காணலாம்'' என்று தெரிவித்துள்ளது. 
 
ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திரயான் 3


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலம்,  கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது. 


தொடர்ந்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் நிலவின் சுற்றுவட்டப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆக.9, 14 மற்றும் 16 ஆம் தேதி என படிப்படியாக தூரம் குறைக்கப்பட்டு, 3 தினங்களுக்கு முன்பாக விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிந்தது.  தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. அதன்படி,  குறைந்தபட்சமாக 113 கிலோமீட்டரும் அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் தொலைவிலும் இருந்தது.  இந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட உயரம் குறைப்புப் பணிகளை இன்று அதிகாலையில் இஸ்ரோ செய்து முடித்தது. 






தென் துருவத்தில் ஆய்வு


தற்போதுள்ள உயரத்தில் இருந்து, லேண்டரின் அடிப்பகுதியில் இருக்கும் நான்கு குட்டி ராக்கெட்டுகள் லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க உதவும்.  அப்படி தரையிறக்கப்பட்டபின் அதிலிருந்து சிறிய சாய்தளம் வெளியே வரும். பின் விக்ரம் லேண்டரில் இருக்கும் பிரக்யான் எனும் ரோவர் சாய்தளத்தை பயன்படுத்தி வெளியே வரும். ரோவர்தான் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் கருவியாகும். தொடர்ந்து பயணித்து நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது, பல்வேறு தகவல்களை சேகரித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புவதுதான் சந்திரயானின் இறுதி  கட்டமாகும்.


இந்த நிலையில் சந்தியராயன் 3 தரையிறங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திராயன் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.