Chandrababu Naidu arrested: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டடதை தொடர்ந்து ஆந்திராவில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 


போக்குவரத்து பாதிப்பு:


ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்து செய்யப்பட்டுள்ளார். இவருடைய ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு துறையின் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறி இன்று காலை 6 மணியளவில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கைதை அடுத்து, ஆந்திரா மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.


எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், ஆந்திரா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு வரும் பேருந்துகளும் தமிழக எல்லையிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ரயில் போக்குவரத்து மட்டும் இயக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பதி - திருமலை இடையே மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 


சந்திரபாபு நாயுடு கைது:


ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் சிஐடி அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.  ஆந்திராவை அடுத்த நந்தியாலா நகரிலுள்ள ஞானபுரத்தில் உள்ள ஆர்கே ஃபங்ஷன் ஹாலில் இருந்து காலை 6 மணியளவில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தபோது நந்தியால் ரேஞ்ச் டிஐஜி ரகுராமி ரெட்டி மற்றும் சிஐடி தலைமையில் பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக பூமா அகிலபிரியா, கலுவா சீனிவாசலு, பூமா பிரம்மானந்த ரெட்டி, ஜகத் விக்யாத் ரெட்டி, ஏவி சுப்பர் ரெட்டி, பிஜி ஜனார்தன் ரெட்டி உள்ளிட்ட பல தெலுங்கு தேச கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். ஆந்திர முதல்வராக 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இருந்தார் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.  சட்டவிரோதமாக ரூ.118 கோடி பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று அதிகாலை இவர் கைது செய்யப்பட்டார்.


திறன் பயிற்சியில் ஊழலா..? 


ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு ஊழல் (APSSDS) வழக்கில் சந்திரபாபு நாயுடு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஊழலில், பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஏபிஎஸ்எஸ்டிசி 2016 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், வேலையில்லாத இளைஞர்களுக்கு, அவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. ஆந்திரப் பிரதேச CED பதிவு செய்த FIR அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகமும் (ED) விசாரணை நடத்தி வருகிறது. M/s DTSPL, அதன் இயக்குநர்கள் மற்றும் பலர் ஷெல் நிறுவனங்களின் உதவியுடன் பல நிலை பரிவர்த்தனைகளை மேற்கொண்டு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், ரூ. 370 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.