Tax Devolution: மாநிலங்களுக்கான வரிப்பங்கீடாக 72,961 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு சுமார் 2,976 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.
வரிப்பங்கீடு:
ஒவ்வொரு நிதியாண்டிலும் மத்திய அரசு வசூலிக்கும் மொத்த வரியில் 41 சதவீதம், மாநிலங்களுக்கு 14 தவணைகளாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான வரிப்பங்கீடாக 72 ஆயிரத்து 961 கோடியே 21 லட்ச ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. வழக்கமாக மாதத்தின் 10வது நாளில் வழங்கப்படும் இந்த வரிப்பங்கீடு, புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 11ம் தேதியே விடுவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மாநில அரசுகளுக்கு ஜனவரி 10ஆம் தேதி வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961,21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. இந்த வரி பகிர்வு மூலம் மாநிலங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும், வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியான நிதிப்பங்கீடு:
| வரிசை | மாநிலம் | ஒதுக்கப்பட்ட நிதி (கோடி) |
| 1 | ஆந்திரா | 2952.74 |
| 2 | அருணாச்சலபிரதேசம் | 1281.93 |
| 3 | அசாம் | 2282.24 |
| 4 | பீகார் | 7338.44 |
| 5 | சத்தீஸ்கர் | 2485.79 |
| 6 | கோவா | 281.63 |
| 7 | குஜராத் | 2537.59 |
| 8 | ஹரியானா | 797.47 |
| 9 | இமாச்சலபிரதேசம் | 605.57 |
| 10 | ஜார்கண்ட் | 2412.83 |
| 11 | கர்நாடகா | 2660.88 |
| 12 | கேரளா | 1404.50 |
| 13 | மத்தியபிரதேசம் | 5727.44 |
| 14 | மகாராஷ்டிரா | 4608.96 |
| 15 | மணிப்பூர் | 522.41 |
| 16 | மேகாலயா | 559.61 |
| 17 | மிசோரம் | 364.80 |
| 18 | நாகாலாந்து | 415.15 |
| 19 | ஒடிஷா | 3303.69 |
| 20 | பஞ்சாப் | 1318.40 |
| 21 | ராஜஸ்தான் | 4396.64 |
| 22 | சிக்கிம் | 283.10 |
| 23 | தமிழ்நாடு | 2976.10 |
| 24 | தெலங்கானா | 1533.64 |
| 25 | திரிபுரா | 516.56 |
| 26 | உத்தரபிரதேசம் | 13088.51 |
| 27 | உத்தரகாண்ட் | 815.71 |
| 28 | மேற்குவங்கம் | 5488.88 |
|
| மொத்தம் | 72961.21 |
தமிழ்நாட்டிற்கு ரூ.2,976 கோடி:
இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு 13 ஆயிரத்து 88 கோடி ரூபாயும், பீகாருக்கு 7 ஆயிரத்து 338 கோடி ரூபாயும், மத்தியபிரதேசத்திற்கு 5 ஆயிரத்து 727 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 2 ஆயிரத்து 976 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால் அதில் 29 காசுகள் மட்டுமே மத்திய அரசு நிதிப்பங்கீடான வழங்குகிறது. அதேநேரம், உத்தரபிரதேசம் அரசு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும், 2.73 ரூபாய் திரும்ப வழங்கப்படுகிறது என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் ஜிஎஸ்டி வசூல்:
அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.67 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வசூலானை 1.42 லட்சம் கோடி ரூபாயை விட 15 சதவிகிதம் அதிகமாகும். இதில் சிஜிஎஸ்டி (CGST) ரூ.30,420 கோடி, எஸ்ஜிஎஸ்டி (SGST) ரூ.38,226 கோடி, ஐஜிஎஸ்டி (IGST) ரூ.87,009 கோடி (இறக்குமதியில் ரூ.830.19 கோடி மற்றும் செஸ் ரூ.12,274 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ.1,036 கோடி உட்பட) வசூலி ஆகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.