காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலால் 26 பேர் பலியான நிலையில், இந்தியாவே பரபரப்பாக உள்ளது. இந்த நேரத்தில், வாட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவல் பரவி வருகிறது. அதில், இந்திய ராணுவத்திற்கு நிதி வசூலிக்கும் விதமாக, அரசு வெளியிட்ட செய்திபோல், வங்கிக் கணக்கு விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பிரபல நடிகரை வேறு இழுத்துவிட்டிருக்கிறார்கள். அந்த வாட்ஸ்அப் மெசேஜ் பொய் என்றும், ராணுவத்திற்கு எந்த நிதியும் வசூல் செய்யப்படவில்லை என்றும், இந்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பில் உலா வரும் போலி குறுந்தகவல்
“நடிகர் அக்ஷய் குமார் பரிந்துரைத்த மோடி அரசின் மற்றொரு நல்ல முடிவு:*........ஒரு நாளைக்கு ஒரு ரூபாய், அதுவும் இந்திய ராணுவத்துக்கு. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல் மற்றும் போர் பகுதியில் காயம் அல்லது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வங்கிக் கணக்கை மோடி அரசு துவக்கியது. இதில் ஒவ்வொரு இந்தியரும் அவரவர் விருப்பப்படி எந்த தொகையையும் பங்களிக்கலாம். இது ரூ.1ல் தொடங்குகிறது மற்றும் வரம்பற்றது.
இந்தப் பணம் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும் பயன்படுத்தப்படும். புதுடில்லி, *மன் கி பாத், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் மக்கள் பரிந்துரைத்தபடி, இன்றைய எரியும் சூழ்நிலையில் மோடி அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்து, கனரா வங்கியில் ராணுவ நல நிதி போர் விபத்து நிதிக் கணக்கைத் திறந்தது.
இது திரைப்பட நடிகர் அக்ஷய் குமாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக். இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் 70% பேர் கூட இந்த நிதியில் தினமும் ஒரு ரூபாயை முதலீடு செய்தால், அந்த ஒரு ரூபாய் ஒரு நாளைக்கு 100 கோடியாக மாறும். 30 நாட்களில் 3000 கோடிகள், ஒரு வருடத்தில் 36000 கோடிகள். பாகிஸ்தானின் ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் ரூ.36,000 கோடி கூட இல்லை. தேவையில்லாத வேலைக்கு தினமும் 100, 1000 ரூபாய் செலவழிக்கிறோம், ஆனால் ராணுவத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாகும்.
உங்கள் பணம் நேரடியாக ராணுவ உதவி மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் போர் விபத்து நிதியில் டெபாசிட் செய்யப்படும். இராணுவ உபகரணங்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்
எனவே இந்த பிரச்சாரத்தில் இணைந்து ராணுவத்திற்கு நேரடியாக உதவுங்கள். மற்ற நாடுகளை பற்றி கெட்ட வார்த்தைகளால் திட்டி, சாலைகளை மறித்து அறிக்கை விடுவதால் எதையும் சாதிக்க முடியாது. நாட்டு மக்களின் எண்ணங்களை செயல்படுத்தி உங்கள் நாட்டு ராணுவத்தை பலப்படுத்துங்கள். எனவே எந்த நாட்டினதும் உதவியின்றி தங்கள் நிலையை காட்ட முடியும் வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வங்கி விவரங்கள்:
கனரா வங்கி A/C பெயர்: ராணுவ நல நிதியம் போரில் உயிரிழந்தவர்கள், A/C எண்: 90552010165915 IFSC குறியீடு: CNRB0000267 தெற்கு விரிவாக்க கிளை, புது தில்லி.
👉 குறைந்தது ஐந்து குழுக்களுக்கு இந்த செய்தியை அனுப்பவும் சிலர் அனுப்ப மாட்டார்கள் ஆனால் நீங்கள் அனுப்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்
🙏 ஜெய் ஹிந்த். வந்தேமாதரம்.🙏“
இந்த குறுந்தகவல் தான் வாட்ஸ்அப்பில் உலா வருகிறது. இதில் மெசேஜை படிப்போரை கவர்வதற்காக, நடிகர் அக்ஷ்ய் குமாரின் பெயரை வேறு இழுத்துவிட்டிருக்கிறார்கள்.
இந்திய ராணுவ அமைச்சகம் மறுப்பு
இந்த வாட்ஸ்அப் குறுந்தகவலை இந்திய ராணுவ அமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தவும், காயமடைந்த மற்றும் உயிரிழக்கும் ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காகவும் குறிப்பிட்ட வங்கி கணக்கு ஒன்றில் நன்கொடை வழங்குமாறு வாட்ஸ்அப் தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. மந்திரிசபையின் முடிவு எனவும், நடிகர் அக்ஷய் குமாரின் பரிந்துரை இது என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த வங்கி கணக்கு விவரங்கள் தவறானவை. இதன் மூலம் மோசடி நடைபெறும் வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் இதற்கு இரையாகாமல் இருக்க வேண்டும் என்று ராணுவ அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.