பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் தொடர் பரபரப்பை கிளப்பி வருகிறது. மொய்த்ரா, தன்னிடம் லஞ்சம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார்.


இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். 


லோக்பால் எடுத்த அதிரடி நடவடிக்கை:


இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபேவிடம் அளித்த மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய், மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐயிடம் புகார் அளித்தார். இரு தரப்பையும் அழைத்து, மக்களவை நெறிமுறைகள் குழு, விசாரணை நடத்தியது.


இந்த நிலையில், மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் உத்தரவிட்டுள்ளதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "நான் அளித்த புகாரின் அடிப்படையில், தேசிய பாதுகாப்பை சமரசம் செய்து ஊழலில் ஈடுபட்ட மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த லோக்பால் உத்தரவிட்டது"


தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த மொய்த்ரா, சமீபத்தில் பகீர் தகவலை வெளியிட்டிருந்தார். தொழிலதிபர் தர்ஷனிடம் பரிசுகளை பெற்றது உண்மைதான் ஆனால், ஸ்கார்ஃப் துண்டு, லிப்ஸ்டிக்குகள் உள்ளிட்ட ஒப்பனை பொருட்களை தவிர வேறு எந்த பொருளையும் பரிசாக வாங்கவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.


சிக்குகிறாரா மொய்த்ரா..?


மற்ற எந்த விதமான லஞ்சத்தையும் தான் பெறவில்லை என்றும் தொழிலதிபர் தர்ஷனை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் மொய்த்ரா கோரிக்கை விடுத்தார்.


தொழிலதிபர் தர்ஷனிடம் பாஸ்வேர்ட் கொடுத்தது ஏன் என விளக்கம் அளித்த மொய்த்ரா, "எனது தொகுதி தொலைதூரத்தில் இருந்ததால், அங்கிருந்து பணிபுரிந்து கொள்வதற்காக மற்றவர்களுடனும் பாஸ்வேர்ட் பகிர்ந்து கொண்டேன். அக்கவுண்டை லாக் இன் செய்யும்போது,
ஒவ்வொரு முறையும் OTP வரும். எனது குழுவினர், கேள்விகளை அனுப்புவார்கள். அரசாங்க மற்றும் நாடாளுமன்ற வலைத்தளங்களை இயக்கும் தேசிய தகவல் மையம், பாஸ்வேர்டை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என விதி வகுக்கவில்லை" என்றார்.


தனது முன்னாள் காதலர் குறித்து பேசிய மொய்த்ரா, "தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுவதற்கு அவர் (முன்னாள் காதலர் தேஹாத்ராய்)
தகுதியற்றவர். எங்களின் செல்ல நாய் ஹென்றி, யாரிடம் இருக்க வேண்டும் என்பதற்காக சண்டையிட்டு கொண்டிருந்தோம். இதற்காகதான், அவர் எனக்கு எதிராக புகார் அளித்தார்" என்றார்.