நாட்டில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓர் அதிர்ச்சிப் புள்ளிவிவரம் கூறுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு அவர்களை வாட்டிய சூழலிலும், கல்வி வாய்ப்பு குறைந்த நிலையிலும் பெண்களுக்கான திருமண வயது 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்காக மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 


போராட்டங்களால் கிடைத்த சீர்திருத்தங்கள்


இந்தியாவைப் பொறுத்தவரை இத்தகைய சமூக சீர்திருத்தங்கள் அனைத்தும், தொடர் போராட்டங்களுக்குப் பிறகே சாத்தியமாகின. அப்போதெல்லாம் குழந்தைத் திருமணங்களும் அகமணமுறை எனப்படும் சாதிக்குள்ளேயே நடைபெறும் திருமணங்களுமே அதிகம் நடைமுறையில் இருந்தன. பெண்களின் மன்னிக்க... குழந்தைகளின் திருமண வயது, 1850களில் 10-ஆகவும் 1890-களில் 12 வயதாகவும் இருந்தது.


ஆனாலும் சீர்திருத்தவாதிகளின் தளராத முயற்சியால் சுதந்திரத்துக்கு முன்பாக 1929-ல் சாரதா சட்டம் எனப்படும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி பெண்ணின் திருமண வயது 14 என்றும் ஆணின் மண வயது 18 எனவும் அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தில் 1940-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 15 என்றும், 1978ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலம், பெண்ணின் திருமண வயது 18 என்றும் ஆணின் மண வயது 21 எனவும் உயர்த்தப்பட்டது. 


18க்கும் குறைவான வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் உறவினர்கள், இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் துயரங்கள் தீர்ந்தபாடில்லை. தன்னை விட 15, 20 ஆண்டுகள் மூத்தவரை மணக்க நேர்ந்து, இளம்பெண்ணாக இருக்கும்போதே, கைம்பெண்ணான சோகமும் நேர்ந்தது. 




கொரோனாவால் அதிகரித்த குழந்தைத் திருமணங்கள்


அதேபோல சட்டம் வந்தபிறகும் குழந்தைத் திருமணங்கள் சட்டவிரோதமாக, ரகசியமான முறையில் நடந்து வந்தன. கொரோனாவால் தமிழகத்தில் சேலம், தருமபுரி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 72 பழங்குடியின குக்கிராமங்களில் குழந்தைத் திருமணம் பரவலாக நடைபெற்றதாக குழந்தை உரிமைகளும் நீங்களும் (CRY) என்ற அமைப்பு கவலை தெரிவிக்கிறது. 


2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 19 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளில் 8.69 சதவீதப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யப்பட்டுள்ளது. இதில் தருமபுரியில் 11.1 சதவீதமும் சேலத்தில் 10.9 சதவீதமும் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இது கொரோனா காலத்தில் தொடர்ந்து அதிகரித்தது. இந்த அவலங்கள் அனைத்தும், சட்டத் திருத்தத்தால் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 



சுதா ராமலிங்கம்


சட்டங்கள் என்ன செய்துவிட்டன?


ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிறார் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் இருந்தவரும் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம். அவர் கூறும்போது, ''குழந்தைத் திருமண தடைச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் ஆகியன இருந்தும், நடைமுறையில் அந்தக் குற்றங்கள் நடக்காமல் இருக்கின்றனவா? தகுதிக்கேற்ப வரதட்சணை வாங்கிக் கொண்டுதானே இருக்கிறார்கள்? குழந்தைத் திருமணங்களும் நடந்து கொண்டுதானே இருக்கின்றன? பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் மூலம் சொத்து கிடைக்கிறதா? திருமண வயதை இப்போது உயர்த்த வேண்டியதன் அவசியம் என்ன என்று தெரியவில்லை. 


இதைத்தாண்டி இன்னும் பல அவசியமான விவாதங்கள் நடைபெற வேண்டி உள்ளன. இளம் வயதில் திருமணம் செய்வது உடல் நலனுக்கு உகந்ததில்லை, பெண்கள் படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கலாமே ஒழிய, அதைச் சட்டமாகக் கொண்டுவருவது தேவையற்ற ஒன்று'' என்கிறார்.


இந்தச் சட்டத்தால் கிராமப்புறப் பெண் குழந்தைகள் விரைவில் திருமணம் செய்துகொடுக்கப்படுவது தடுக்கப்படுமே என்று கேட்டதற்கு, ''பெண்களின் திருமண வயது 18 என்று இருக்கும்போதே 14, 15 வயதில் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். சட்டம் வந்ததால் இது மாறவில்லை. எல்லாவற்றையும் சட்டம் மூலமாகவே சரிசெய்து விடமுடியாது.




தனிமனித வாழ்க்கையில் அரசின் தலையீடு ஏன்?


மக்களுக்கு, பெண்களுக்குக் கற்பிக்க வேண்டும், உணர வைக்க வேண்டும். சமூகப் பரிணாமத்தின் மூலம் இதைக் கொண்டுவர வேண்டும். தனிமனித வாழ்க்கையில் அரசின் தலையீட்டை முடிந்த அளவு குறைக்க வேண்டும்'' என்று வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் தெரிவித்தார். 


ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமநிலையில், ஒரே வயதில் திருமணம் நடக்கும்போது புரிதல் இன்னும் சிறப்புற அமையும் என்கிறார் உளவியல் மருத்துவர் அசோகன். அவர் மேலும் கூறும்போது, ''ஒரு பெண்ணுக்கு மூன்று E-க்கள் (Education, Employment, Economy)அவசியம். ஓர் ஆணையும் பெண்ணையும் ஒப்பிடும்போது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெண் வலிமையானவள். எனினும் திருமண வயதை உயர்த்தும்போதுதான் பெண்களின் சார்பு நிலை குறையும். பெண்களுக்கு 18 வயதில் இருக்கும் மனப் பக்குவத்தைவிட, 21 இருக்கும் முதிர்ச்சி, பக்குவம் சிறப்பாக இருக்கும். 


கீழ் நடுத்தர, விளிம்புநிலைக் குடும்பங்களில் இந்தத் திருத்தம் அசாத்தியமான மாற்றத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் பெண்கள் படிக்கக் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்.


இருபாலருக்கும் சம வயதில் திருமணம் சரியா?


ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமநிலையில், ஒரே வயதில் திருமணம் நடக்கும்போது புரிதல் இன்னும் சிறப்புற அமையும். வயதில் மூத்த பெண்களையும் இப்போது ஆண்கள் திருமணம் செய்துகொள்ள தொடங்கியிருக்கிறார்கள். தன்னைவிட மிகவும் வயது குறைவான பெண்ணைத் தேடி, திருமணம் செய்துகொள்வதே ஆணாதிக்க மனநிலைதான். அந்த நிலை மாற இந்தச் சட்டமும் உறுதுணையாக இருக்கும். 


 



உளவியல் மருத்துவர் அசோகன்


ஏமாற்றப்படும் காதல் திருமணங்கள் குறையும்


காதல் என்பது இரு நபர்களுக்கு இடையேயான உணர்வு. அங்கு கனவுகளும் உணர்வுகளும்தான் அதிகம் இருக்கும். திருமணத்துக்குப் பிறகு பெண், ஆண் சார்ந்த உறவு, குடும்பம், நட்பு, கலாச்சாரம், உணவு, மத நம்பிக்கைகளும் உடன் வரும். அப்போதுதான் பிரச்சினை தொடங்கும்.


18 வயதில் இதுகுறித்தெல்லாம் யோசிக்கப் பெண்களுக்கு அனுபவம் போதாது. 21 வயதில் பெண்களுக்கு, ஆண்கள் குறித்தும் உலகம் பற்றியும் இன்னும் நன்றாகப் புரியும். உளவியல் ரீதியாகப் பெண்கள் ஏமாற்றப்படுவது குறையும். பெண்கள் தீர்க்கமாக முடிவெடுக்க முடியும். ஏமாறும் / ஏமாற்றப்படும் காதல் திருமணங்களும் மெல்லக் குறையும். பிற காதல் திருமணங்கள் முதிர்ச்சியுடன் நடக்கும். எனினும் திருமணம் நடந்து, 30 வயதுக்குள் குழந்தைப் பேறை எதிர்கொண்டால்தான் தாய், சேய் இருவரின் உடல்நலனும் சிறப்பாக இருக்கும்'' என்று உளவியல் மருத்துவர் அசோகன் தெரிவித்தார். 


சமுதாய மாற்றங்கள் சாத்தியம்


சட்டங்கள் மூலமாகவே சமுதாய மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ். இதுகுறித்து ஏபிபியிடம் அவர் கூறும்போது, ''இந்த மசோதாவை நிச்சயம் வரவேற்கிறோம். ஆணின் வயது 21 என இருக்கும்போது பெண்ணின் வயது குறைவாய் இருக்க வேண்டிய அவசியம் என்ன? 


இந்தச் சட்டம் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்கான வெளி உறுதிப்படுத்தப்படும். சிறுவயதுத் திருமணத்தால், தங்களின் தனித்தன்மையைத் தாங்களே தெரிந்துகொள்ளாமல் பெண்கள் முடங்கிப்போவது குறையும். முழுமையான கல்வியறிவு, வேலை, பொருளாதாரச் சுதந்திரத்தை அடைய முடியும். பெண் என்றாலே தந்தை, கணவன், மகன் எனப் பிறரைச் சார்ந்தே இருப்பது நீங்கும். 


21 வயது பூர்த்தியான பிறகு பெண்களுக்குத் திருமணம் செய்யுங்கள் என்பதன் அர்த்தம், அவர்களை வீட்டில் பொத்திப் பாதுகாத்து வைத்திருங்கள் என்பதல்ல, அவர்களுக்குக் கல்வி கொடுத்து, சிந்திக்க வையுங்கள், தனித்தன்மையுடன் இயங்க விடுங்கள். மனதளவில் முதிர்ச்சி பெற வையுங்கள் என்பதுதான்'' என்கிறார் வழக்கறிஞர் ரமேஷ். 


 



அரசு வழக்கறிஞர் ரமேஷ்


தாமதத் திருமணங்கள் அதிகமாகும் என்று புகார் எழுப்பப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''ஜாதகம், வரதட்சணை உள்ளிட்ட காரணிகளால்தான் திருமணங்கள் தாமதமாகிறதே தவிர, இந்தச் சட்டத்தால் தாமதமாகாது. சட்டங்கள் மூலமாகவே சமுதாய மாற்றங்களைக் கொண்டு வர முடியும். கொண்டு வந்திருக்கிறோம். இவையே அடித்தட்டு மக்களுக்கான ஆயுதம். சட்டங்களை அமல்படுத்துவதில் சிரமங்கள் இருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவற்றை அமல்படுத்தாமல் இருக்க முடியாது. 1970, 80களில் எத்தனை வீடுகளில் கேஸ் ஸ்டவ்கள் வெடித்தன? இப்போது வெடிக்கின்றனவா?


சட்டம் ஓர் ஆயுதம்


சட்டங்களுக்கு நிச்சயம் வலிமை உண்டு. அவற்றை அனைத்து இடங்களிலும் 100 சதவீதம் அமலாக்க முடியவில்லை என்றாலும், மக்களுக்கு இதனால் விழிப்புணர்வு வரும். இப்போதுவரை 21 வயதுக்குப் பிறகு திருமணங்கள் செய்யுங்கள் என்று அறிவுரையாக மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் சட்டம் வந்தபிறகு அது ஓர் ஆயுதமாக மாறும்.


சட்ட அமலாக்கத்தில் சில சிக்கல்கள் இருக்கலாம். ஓரிரு இடங்களில் தவறாகவும் பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்தச் சட்டத்தால் மக்களிடையே பயம் வரும். திருடினால், குற்றம், தண்டனை என்று சட்டம் உள்ளது. அதற்காகத் திருட்டே நடக்கவில்லையா என்று கூறக் கூடாது. சட்டத்தின் மீதான அச்சத்தால் தவறுகள் குறையும். மாற்றம் வரும்'' என்று வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.  


பெண்களுக்கு படிப்பு, வேலை, சுயசிந்தனை, பொருளாதாரத்தில் தன்னிறைவு ஆகியவற்றின் அவசியத்தை அரசு உணர்த்துவது மிக அவசியம். ஏனெனில் பெண்களின் முன்னேற்றம் என்பது அவர்களின் முன்னேற்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம். அது நாட்டின் முன்னேற்றம்.


-க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramanip@abpnetwork.com