ஜம்மு காஷ்மீரில் மலை உச்சியிலிருந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 55 பேர் படுகாயம் அடைந்தனர். 


விபத்தில் சிக்கிய பேருந்து:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து ஏராளமான பயணிகளுடன் பேருந்து ஒன்று கத்ராவில் உள்ள கோவில் நோக்கி சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்து ஜம்மு மாவட்டம் கத்ராவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லி அருகே சென்று கொண்டு இருந்தபோது மலையில் இருந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 


மலை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் போலீசார் அப்பகுதியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிக்கு உதவி வருகின்றனர். உடனடியாக அவசர ஊர்திகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


10 பேர் உயிரிழப்பு:


விபத்தில் சிக்கிய பேருந்துக்கு அடியில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என்பதை கண்டறிய கிரேன் ஒன்றும் வரவழைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பேருந்தில் பயணித்த அனைவரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்றும், சிஆர்பிஎப் உதவி ஆணையர் அசோக் சவுதாரி தெரிவித்துள்ளார். அவர்கள் வழிமாறி சென்று இந்த விபத்தில் சிக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.


பேருந்தில் மொத்தம் 75 பேர் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த கோர விபத்தில் சிக்கி 10 பயணிகள் பரிதாபமாக பலியாகினர். 55-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


குழந்தைக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிக்காக உறவினர்களுடன் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.