மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மூத்த அரசு அதிகாரியின் மகன், தனது காதலியை காரை ஏற்றி கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அரசு அதிகாரியின் காதலி (26) படுகாயம் அடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் பிரியா சிங்.


அரசு அதிகாரியின் மகன் வெறிச்செயல்:


மகாராஷ்டிரா தானேயில் உள்ள ஹோட்டல் அருகே கடந்த திங்கள்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் கெய்க்வாட்டின் மகன் அஸ்வஜித் கெய்க்வாட் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தனக்கும் தனது காதலனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கடைசியில் கொலை முயற்சியில் முடிந்ததாக பிரியா சிங் தெரிவித்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடூர அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பிரியா சிங், "சுமார் 5 வருடங்களாக காதலித்து வரும் அஸ்வஜித்திடம் இருந்து செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணியளவில் அழைப்பு வந்தது. குடும்ப விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார்.


அங்கு சென்றதும் சில நண்பர்களைச் சந்தித்தேன். எனது காதலன் விசித்திரமாக நடந்து கொண்டதை உணர்ந்தேன். அதனால் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். நாங்கள் தனிமையில் பேச வேண்டும் என்று வலியுறுத்தினேன். விழாவிலிருந்து வெளியேறிய
ப்ரியா அஸ்வஜித்திடம் பேசி பதற்றத்தைத் தணிக்கலாம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தாள். ஆனால், அவர் தனது நண்பர்களுடன் வெளியே வந்து என்னை துன்புறுத்த தொடங்கினார்.


மகாராஷ்டிராவில் பரபரப்பு:


என் காதலனும் அவனுடைய நண்பனும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். என்னைக் காப்பாற்றும்படி என் காதலனைக் கேட்டேன். துன்புறுத்த வேண்டாம் என கெஞ்சினேன். என் கற்பனைக்கு அப்பாற்பட்ட சம்பவம் நடக்க தொடங்கியது. என் காதலன் என்னை அறைந்தான். என் கழுத்தை நெரிக்க முயன்றான். நான் அவனைத் தள்ள முயன்றேன். அவன் என் கையைக் கடித்தான். தாக்கினான். என் தலைமுடியை இழுத்தான். அவனுடைய நண்பன் என்னைத் தரையில் தள்ளினான்.


அத்துடன் முடிவடையவில்லை. எனது ஃபோன் மற்றும் பிற பொருட்களை அவனது காரில் இருந்து எடுக்க முயன்றபோது, ​​அஷ்வஜித் தன் டிரைவரை விட்டு என் மீது காரை ஏற்ற முயற்சி செய்தான்" என்றார்.


 






இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், "திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கோட்பந்தர் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு அந்தப் பெண் அஸ்வஜித் கெய்க்வாட்டைச் சந்திக்கச் சென்றிருந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


பின்னர், பாதிக்கப்பட்ட பெண் தனது காரில் இருந்து தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேற முயற்சித்தபோது, ​​​​வாகனத்தை ஓட்டி வந்தவர் அவர் மீது காரை ஏற்ற முயற்சித்தார். இதனால் அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்" என்றார்.