‘ஒரு நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

  


பாஜகவின் முக்கிய வாக்குறுதி


2014 முதல் பாஜக, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முன்மொழிந்து வருகிறது. மக்களவை தேர்தல் அறிக்கையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். கடந்த சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முன்னுரிமையாக உள்ள ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றார். அடிக்கடி நடத்தப்படும் தேர்தல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் பேசியிருந்தார். 


மேலும் தேசிய வளங்கள் சாமானியர்களுக்கு பயன்படுத்தப்படுவதை கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கனவை நனவாக்க முன்வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.  


ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு


இதுதொடர்பாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து இருந்தது. இந்தக் குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தனது ஆய்வறிக்கயை அண்மையில் சமர்ப்பித்தது. அதில், முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதை தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 






லோக்சபா, மாநில சட்டசபைகள் மற்றும் நகராட்சிகள் & பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய, மூன்று அடுக்கு அரசாங்கங்களுக்கும் 2029 ஆம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு சபை அல்லது நம்பிக்கையில்லா நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்கவும் சட்ட ஆணையம் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.


இந்த நிலையில், ‘ஒரு நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.