கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டனாடு பகுதியில் தகழி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், பறவை காய்ச்சல்(Bird Flu) உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 10வது வார்டு கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  பிற பகுதிகளுக்கு பறவை காய்ச்சல் பரவி விடாமல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர் தலைமையிலான அவசரகால கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வாத்து பண்ணைகள் உள்ளன. அந்த வகையில் ஆலப்புழா அருகே அம்பலப்புழாவில் ஜோசப் என்பவர் வாத்து பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் கடந்த சில நாட்களாக வாத்துகள் திடீர் திடீரென செத்து விழுந்துள்ளன. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்ததால் அதிர்ச்சியடைந்த ஜோசப், இதுகுறித்து திருவல்லாவில் உள்ள பறவைகள் நோய் சிகிச்சை மையத்திற்கு தகவல் தந்தார். உடனே டாக்டர்கள் சம்பந்தப்பட்ட வாத்து பண்ணைக்கு வந்து, இறந்த வாத்துகளின் ரத்த மாதிரியை சேகரித்து, திருவனந்தபுரத்தில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனை முடிவில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.



பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கிமீ சுற்றளவில் உள்ள வாத்துகள், கோழிகள் மற்றும் பிற வீட்டுப் பறவைகளை அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு, சுகாதாரம், காவல் துறை உள்ளிட்ட மாவட்ட உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாத்து, கோழி, காடை, வீட்டுப் பறவைகளின் முட்டை, இறைச்சி, உரம் ஆகியவற்றை பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். சம்பக்குளம், நெடுமுடி, முட்டார், வியாபுரம், கருவாட்டா, திருக்குன்றப்புழா, தகழி, புறக்காடு, அம்பலபுழா தெற்கு, அம்பலபுழா வடக்கு, எடத்துவ ஊராட்சிகள் மற்றும் ஹரிப்பாட் நகராட்சிப் பகுதிக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தகழியில் உள்ள பறவைகளை அழிப்பதற்கும், அவற்றை அழிக்கவும் கால்நடை பராமரிப்புத் துறையால் விரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில், புலம்பெயர் பறவைகளுக்கு நோய் தொற்று உள்ளதா, இல்லையா என்பதை கண்காணித்து ஆய்வு செய்ய உதவி வன பாதுகாவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினசரி அறிக்கை சமர்ப்பிக்க கால்நடை பராமரிப்பு துறைக்கு உத்தரவு வழங்கப்பட்டது.



பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளுயன்சா (Bird flu or avian influenza) என்னும் தொற்றுநோய் முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது, அதோடு கூட மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பறவைக் காய்ச்சலின் மிகவும் பொதுவான வடிவமாக H5N1 உள்ளது. H5N1 என்பது வைரஸ்/இன்ஃப்ளுயன்சா ஆகும். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவை அல்லது விலங்குகளுடன் மனிதர்கள் தொடர்புகொண்டால் இந்த வைரஸ் அவர்களையும் தாக்கும். இந்த வைரஸ் பொதுவாக மனிதனிடமிருந்து மனித தொடர்பு மூலம் பரவாது என்றாலும், மனித காய்ச்சல் வைரஸ்கள் மற்றும் H5N1 (Human flu viruses and H5N1) ஆகியவை சக மனிதர்களிடையே பரவக்கூடிய ஒரு புதிய வைரஸ் தொற்றை உருவாக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது. இது இன்ஃப்ளூயன்ஸா என்கிற ‘A’ வகை வைரஸால் ஏற்படும் மிகவும் தீவிரமான வைரஸ் தொற்று நோயாகும். இது பொதுவாக கோழிகள் மற்றும் வான்கோழிகள் போன்ற கோழிகளை பாதிக்கிறது. வைரஸின் பல வகைகள் உள்ளன – அவற்றில் சில லேசானவை மற்றும் கோழிகளிடையே குறைந்த முட்டை உற்பத்தி அல்லது பிற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.