நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொண்ட பிறகும் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது, சந்தேகத்த எழுப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.


மழைக்காலகூட்டத்தொடர்:


இரண்டு வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும், பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகிறது. 


நம்பிக்கையில்லா தீர்மானம்:


இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பேசவைக்கும் நோக்கில், எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இதை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட பிறகும், தற்போது வரை விவாதம் நடத்தப்படவில்லை. ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலம் தொடர்ந்து பல்வேறு மசோதாக்கள் அவையில் விவாதம் இன்றி ஒப்புதல் பெறப்படுகின்றன. இதனிடையே, எதிர்க்கட்சிகளின் 20 எம்.பிக்கள் கொண்ட குழு மணிப்பூர் சென்று வந்துள்ளது. இதையடுத்து, வார விடுமுறை முடிந்து நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


காங்கிரஸ் குற்றச்சாட்டு:


இந்த நிலையில் தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அக்கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினரான மணீஷ் திவாரிமக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, எந்த மசோதாவோ, பிற அலுவல்களோ அவைக்கு கொண்டு வருவது முற்றிலும் நாடாளுமன்ற மரபு, உரிமை மற்றும் தார்மீகங்களை மீறும் செயல். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை திட்டமிடுவதற்கான 10 நாள் கால அவகாசத்தை மசோதாக்களை நிறைவேற்ற பயன்படுத்த முடியாது. நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு நடந்துள்ள அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்திற்குரியவை. ஆய்வு செய்ய வேண்டும் எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு மக்களவை அல்லது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களின் சட்டப்பூர்வ தன்மையும், அவை சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டதா? இல்லையா? என்பதையும் நீதிமன்றத்தால் ஆய்வு செய்ய வேண்டும்.




நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் (courtesy: ANI)


”பிரதமர் மோடி பேச வேண்டும்”


மணிப்பூரில் நடந்ததும், அங்கு தொடர்ந்து நடப்பதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மாநிலத்திலும்,  மத்தியிலும் பாஜக அரசு உள்ளது. எனவே, யாராவது இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.  மணிப்பூரின் மிகவும் மோசமான சூழல் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டு பிரதமர் மோடி அறிக்கை அளிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாடாளுமன்ற தொடர் தொடங்குவதற்கு முன், பிரதமர் மிகவும் கவலைப்படுத்தப்பட்ட கருத்தை வெளியிட்டார். அதன்பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பலமுறை அளிக்கப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானங்களை அவைத்தலைவர்கள் ஏற்கவில்லை. 


”கேலிக்கூத்தாக இருக்கும்”


எனவே எந்த ஒரு அரசுக்கும் முக்கியமாக இருக்க வேண்டிய பொதுவாழ்வின் ஒழுக்கம், நன்னடத்தை மற்றும் பொறுப்புக்கூறல் என்ற கோட்பாட்டை அமல்படுத்துவதற்காக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதைத்தவிர எதிர்க்கட்சி கூட்டணிக்கு வேறு வழி இல்லை. எனவே இந்த சூழ்நிலையில், மணிப்பூர் விவகாரத்துக்கு பதில் அளிக்காமல் இருக்க பிரதமர் முடிவு செய்தால், அது கேலிக்கூத்தாக இருக்கும்” என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பேசியுள்ளார்.