பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஐடி ஊழியர் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றும், வார இறுதியில் ரேபிடோ டாக்ஸி ஓட்டும் சம்பவம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற ஆதங்கம் இன்றைய காலத்தில் பல துறைகளிலும் பணியாற்றுபவர்கள் இடையே உள்ளது. இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு செய்வது, தனியாக சொந்தமாக பிசினஸ் கவனிப்பது என பல விஷயங்களில் நாம் நாட்டம் செலுத்தி வருவதை பார்த்திருக்கலாம். நம்மை சுற்றியிருக்கும் அனைத்தின் விலையும் உயர்ந்து விட்டது. ஆனால் சம்பளம் மட்டும் அப்படியே இருப்பதாக பலரும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதாவது எக்ஸ் வலைத்தளத்தில் ஷபாஸ் என்ற நபர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சர்வதேச கம்பெனி ஒன்றில் ஐடி ஊழியராக பணியாற்றும் 35 வயது நபரை சந்தித்தேன். பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டாவிற்குப் பயணம் செய்தபோது ராபிடோ முன்பதிவு செய்தேன். அந்த நபர் தான் பைக் டாக்ஸி ஓட்டுநராக வருகை தந்தார். நாங்கள் பயணத்தை தொடங்கியபோது அவர் என்னிடம் கன்னடத்தில் பேச தொடங்கினார்.
ஆனால் நான் சரியாக கன்னடம் பேசவில்லை என்பதால் ஆங்கிலத்தில் உரையாட தொடங்கினார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று அவர் கேட்க, நான் ஐடி துறையில் பணியாற்றுவதாக சொன்னேன். தானும் அதே துறையில் ஊழியர் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது கம்பெனி பெயரை சொல்லி, லட்சத்தில் சம்பளம் பெறுவதாகவும் கூறினார். அந்த பைக் டாக்ஸி ஓட்டுநருக்கு திருமணமாகி ஒரு கைக்குழந்தை உள்ளது. இதில் கிடைக்கும் வருமானம் தனது குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்ற பயன்படுவதாக அவர் கூறினார்.
பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சமீபகாலமாக இதுபோன்ற லட்சக்கணக்கில் சம்பளம் பெறுபவர்களில் சிலர் தங்களது தேவையை பூர்த்தி செய்ய அந்த பணம் போதவில்லை என கூறி பார்ட் டைம் வேலைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளதை இந்த சம்பவம் காட்டுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உண்மையிலேயே என்னைச் சிந்திக்க வைத்தது. ஒரு நல்ல ஐடி வேலையும், ஆறு இலக்கச் சம்பளமும் வாங்கும் ஒருவருக்கே வார இறுதி நாட்களில் ஒரு பகுதி நேர வேலை தேவை என்று தோன்றினால், பெங்களூரு மற்றும் பிற முதல் நிலை நகரங்களில் வாழ்க்கை எவ்வளவு விலை உயர்ந்ததாகிவிட்டதா? என அந்த நபர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது சமூக கலாச்சாரம் மற்றும் வேலை - வாழ்க்கை சமநிலை குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது. அதேசமயம் சிலர் சமூகத்தில் மனநிறைவு, மகிழ்ச்சி ஏற்பட்ட மக்களுடன் பழகுவதற்காகவும் இத்தகைய பார்ட் டைம் பணிகளில் ஈடுபடுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
