ஆந்திர மாநில போக்குவரத்துத்துறை வீட்டிலிருந்தே பயணிகளை ஏற்றிச்செல்லும் வசதியை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை முயற்சியானது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
கடைக்கோடி கிராமங்களை இணைக்கும் பேருந்துகள்
பெருநகரங்கள் தொடங்கி கடைக்கோடி கிராமம் வரை போக்குவரத்து சாதனமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசால் இயக்கப்படும் சாதாரண கட்டணம் தொடங்கி தொலை தூரம் வரை செல்லும் பேருந்துகள், தனியாரால் இயக்கப்படும் பயணிகள் பேருந்து, சொகுசு வசதிகள் ஆம்னி பேருந்து என பல தரப்பட்ட பேருந்துகளை நாம் பார்த்திருப்போம், பயணித்திருப்போம். இத்தகைய பேருந்துகளில் ஏறி, இறங்க குறிப்பிட்ட இடங்களில் பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கும். நாம் ஏதேனும் இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த இடங்களுக்கு சென்றே நம்மால் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முடியும்.
வீடு தேடி வரும் அரசு பேருந்துகள்
இப்படியான நிலையில் பயணிகளை சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகமான ஏபிஎஸ்ஆர்டிசி புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது வீட்டிலிருந்தே பயணிகளை ஏற்றிச்செல்லும் வசதியை வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விஜயவாடா நகர எல்லைக்குள் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக APSRTC புதிய நடவடிக்கைகளை அடிக்கடி எடுத்து வருகிறது. அந்த வகையில் நீண்ட தூரம் நடந்து வந்து பயணம் மேற்கொள்வதை குறைக்கும் வகையில் பயணிகளின் வீட்டு வாசலிலேயே பேருந்துகளை அழைத்துச் செல்லும் வசதியை வழங்கத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தொலைதூர பேருந்துகளில் தொடக்கம்
தொலைதூர இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ஒரே பகுதிக்குள் இருந்து முன்பதிவு செய்திருந்தால் அவர்களை அழைத்துச் செல்ல ஒரு பேருந்து அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சொகுசு பேருந்து, ஏசி, ஸ்லீப்பர் பேருந்துகள் தொலைதூர இடங்களுக்குச் சேவை வழங்குகின்றன. அதிகப் பொருட்கள் இருக்கும்போது பேருந்து நிறுத்தம் செல்வது மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இது பயண நேரத்தை அதிகமாக மாற்றுகிறது. ஒருவரால் மற்றொருவரும் சிரமப்படும் சூழல் உள்ளது.
நிச்சயமாக இந்த திட்டம் மக்களுக்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. முதலில் விஜயவாடாவிலும், பின்னர் மாநிலம் முழுவதுலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகள் முன்கூட்டியே போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சிகளை விரைவில் செயல்படுத்த அதிகாரிகள் கடுமையாக முயற்சி மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
