Andhra Bus Accident : அல்லூரி மாவட்டத்தில் கூர்மையான வளைவில் திரும்ப முயன்றபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆந்திராவில் கோர விபத்து
ஆந்திர மாநிலம் அல்லுரி மாவட்டத்தில் இன்று காலை ஒரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அதிகாலை 5:30 மணியளவில் துளசிபகாலு கிராமத்திற்கு அருகில் நடந்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் தகவலின்படி, விபத்துக்குள்ளான பேருந்தில் 35 பயணிகள், இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு க்ளீனர் ஆகியோர் இருந்துள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
"ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு பேர் சம்பவ இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சி.எச்.சி சிந்தூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீட்புப் பணி நடந்து வருகிறது. நிலைப்படுத்தப்பட்ட பிறகு, காயமடைந்தவர்களை பத்ராச்சலத்திற்கு மாற்றுவோம்" என்று கலெக்டர் கூறினார்.
நடந்தது என்ன?
பயணிகள் பத்ராசலம் கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டு பத்ராசலத்திலிருந்து அன்னவரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் சிந்தூரு மற்றும் பத்ராசலம் இடையேயான மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது,கூர்மையான வளைவில் திரும்ப முயற்சிக்கையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையை விட்டு விலகிச் சென்றதாகக் கூறப்படுகிறது, இதனால் அது செங்குத்தான சரிவில் விழுந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் பயணிகளை மீட்டனர்.
ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏழு பேர் சம்பவ இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சி.எச்.சி சிந்தூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களத் உடல்நிலை சீரானதும் காயமடைந்தவர்களை பத்ராச்சலத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனிடையே மீட்புப் பணி நடந்து வருகிறது.
முதலமைச்சர் இரங்கல்
விபத்து குறித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தினார்.
தொடரும் பேருந்து விபத்துகள்:
ஆந்திர மாநில கர்னூலில் கடந்த மாதம் பேருந்தில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் சுமார் 25 பேர் வரை உயிரிழந்தனர். முன்னதாக அக்டோபரில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த மற்றொரு பேருந்து விபத்தில் சுமார் 20 பேர் வரை உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆந்திராவில் மேலும் ஒரு பேருந்து விபத்து நிகழ்ந்துள்ளது.