கடலூர் மாவட்டத்தில் விளை நிலங்களை  காப்பதற்காகவும், என்.எல்.சியை வெளியேறுமாறும் வலியுறுத்தி இன்று காலை 11.30 மணியளவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்கினார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் புதிய சுரங்கம் மற்றும் ஏற்கனவே உள்ள சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக பொன்விளையும் பூமி 25 ஆயிரம் ஏக்கரை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை என்.எல்.சி நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் தீவிரப்படுத்தியிருக்கின்றன. கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதற்கான இந்த நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்களின் வேளாண் நிலங்களை கையகப்படுத்தி அமைக்கப்பட்ட சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களை பயன்படுத்தி என்.எல்.சி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி வருவாய் ஈட்டும் நவரத்னா நிறுவனமாக உருவெடுத்துள்ளது. என்.எல்.சி  முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 9 கிராமங்களில் இருந்து 3000-க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களும், இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் இருந்து 10,000 ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன; இவை தவிர மூன்றாவது சுரங்கத்திற்காக கொளப்பாக்கம், அரசகுழி, சிறுவரப்பூர், உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இவற்றின் பரப்பு இதுவரை கையகப்படுத்தப்பட்ட 37,256 ஏக்கரில் சுமார் நான்கில் மூன்று பங்காகும். 


என்.எல்.சிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் சாதாரணமானவை அல்ல. அவை முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள் ஆகும். மலைக் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும்  இந்த நிலங்களில் விளையும். இப்போது கூட அங்கு நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் மட்டுமின்றி முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் விளைகின்றன.
 ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்களை நிலக்கரி சுரங்கத்திற்காகப் பறித்து விட்டு, அவற்றின் உரிமையாளர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்க என்.எல்.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். 


இந்த சூழலில் இன்று காலை நடைப்பயணத்தை தொடங்கிய நிலையைல் ட்விட்டரில் #என்.எல்.சியே வெளியேறு என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 






இந்த ஹாஷ்டாகை பயன்படுத்தி பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ #NLC-யை வெளியேற்ற வலியுறுத்தி எழுச்சி நடை பயணம். இன்றும் நாளையும். வானதிராயபுரம் முதல் தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி, கரிவெட்டி வரை! #என்எல்சியே_வெளியேறு #PMKAgainstNLCLandGrab






என்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரிக்க விட மாட்டோம். சுற்றுச்சூழலையும், நீர்வளத்தையும் அழிக்கும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாராத்தை கெடுக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும். (2/2) #என்எல்சியே_வெளியேறு #PMKAgainstNLCLandGrab” என பதிவிட்டுள்ளார். 


பலரும் இந்த ஹாஷ்டாக் பயன்படுத்தி ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.