மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம், பாரமதி அருகே விபத்துக்குள்ளாகியதில், பயணித்த 6 பேரும் பரிதாபமாக பலியாகினர். இதில் விபத்து நடந்தது எப்படி என்று சம்பவ இடத்தில் இருந்து, ஏபிபி செய்தியாளர் விளக்குகிறார்.
இந்த நிலையில் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து முதல் வீடியோ விஷுவல் வெளியாகி உள்ளது. இதில் அடர் புகை எழுந்தவாறு, சம்பந்தப்பட்ட இடம் கருகியவாறே காணப்படுகிறது.
விபத்து நடந்தது எப்படி?
தரையிறங்க முயன்றபோது விமான ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், நிலத்தில் மோதி சில அடி தூரத்திற்குச் சறுக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. எமர்ஜென்சி லேண்டிங் செய்ய முயன்றபோது, அதிவேகத்தில் கீழ் நோக்கித் தறிகெட்டுப் பாய்ந்தது.
இதில் நொறுங்கிய விமானம், தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களுக்கு எல்லாம் விமானம் முற்றிலுமாக எரிந்து நாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் இந்த அஜித் பவார்?
அஜித் பவார் ஜூலை 22, 1959 அன்று அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவாலி பிரவரா என்ற இடத்தில் பிறந்தார், கிராமப்புற வாழ்க்கை மற்றும் பொது ஈடுபாடு இரண்டிலும் வேரூன்றிய ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரின் சித்தப்பாதான் சரத் பவார். இவர் நீண்ட காலம், 6 முறை மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸில் பெரிய பரபரப்புகளை ஏற்படுத்தியவர் அஜித்பவார். கடந்த 2019ம் ஆண்டு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து துணை முதலமைச்சரானார். தேசியவாத காங்கிரஸ் யாருக்குச் சொந்தம் என்பதில் இவருக்கும் அஜித் பவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
