அகமதாபாத் மருத்துவ கல்லூரி விடுதி மீது ஏர் இந்தியா விமானம் மோதியதை அடுத்து அங்கிருக்கும் மாணவர்களும், கல்லூரி ஊழியர்களும் தீயில் இருந்து தப்பிப்பதற்காக, ஜன்னல்களில் இருந்து எகிறி குதிக்கும் புது வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜன்னல்களில் இருந்து எகிறி குதித்த மாணவர்கள்:
கடந்த வியாழக்கிழமை, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம், டெக் ஆப் செய்த 40 வினாடிகளில் பி. ஜே. மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணம் செய்த ஒருவரை தவிர மற்ற அனைவரும் (241 பயணிகள்), கல்லூரி விடுதியில் இருந்த 33 பேரும் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடம் மருத்துவக் கல்லூரி உணவகம் ஆகும். அங்கு மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். விபத்துக்குப் பிறகு, அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதில், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விமானம் மோதியதால் பற்றி எரியும் விடுதி:
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், மேல் தளத்தில் இருந்த மாணவர்களும், கல்லூரி ஊழியர்களும் தீ விபத்தில் இருந்து தப்பிக்க, கல்லூரியின் ஜன்னல்களில் இருந்து எகிறி குதித்தனர். ஜன்னல்கள் வழியாக மாணவர்கள் தப்பிக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
நேற்று வெளியான மற்றொரு வீடியோவில், விமானத்தில் பயணம் செய்துவிட்டு தப்பித்த ஒரே நபரான ரமேஷ் தப்பி பிழைக்கும் காட்சி வெளியானது. அந்த வீடியோவில், இடது கையில் மொபைல் போனுடன் விபத்து நடந்த இடத்திலிருந்து வெள்ளை நிற டி-சர்ட்டில் ரமேஷ் நடந்து வருவதைக் காணலாம்.
காலில் காயத்துடன் அந்த நபர் நொண்டி நொண்டி நடப்பதை வீடியோவில் பார்க்கலாம். அவரது ஆடைகளில் ரத்தக் கறைகள் படிந்துள்ளன. அவரின் பின்னே, விமானம் பற்றி எரிகிறது.
உள்ளூர்வாசிகள் அவரை நோக்கி விரைந்து சென்று, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். விபத்து நடப்பதற்கு ஒரு சில வினாடிக்கு முன்பு அவர் அமர்ந்திருந்த இருக்கை உடைந்து தனியே வந்ததாகவும் அவர் அருகில் இருந்த கதவு உடைந்ததால் தன்னால் தப்பிக்க முடிந்ததாகவும் அவர் கூறியிருந்தார். தனது சீட் பெல்டை கழற்றிவிட்டு விமானத்தில் இருந்து உடனே வெளியே வர முடிந்ததாகவும் அவர் கூறினார்.