AI Impact Summit: காற்றில் பறந்த மோடி மானம்..! மூட்டை, முடிச்ச கட்டிட்டு கிளம்புங்க - ரூ.3 லட்சத்திற்கு சீனா பொம்மை
AI Impact Summit Robo Dog: டெல்லியில் நடைபெறும் AI உச்சி மாநாட்டில் ரோபோ டாக் மூலம் சர்ச்சையில் சிக்கிய, கால்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் அரங்கை உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.

AI Impact Summit Robo Dog: சீனாவில் இருந்து வாங்கிவரப்பட்ட ரோபோ டாகை, தாங்களே வடிவமைத்ததாக கால்கோடியாஸ் பல்கலைக்கழகம் தெரிவித்தது அம்பலமாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
டெல்லியில் AI உச்சி மாநாட்டில் சர்ச்சை
டெல்லியில் கடந்த 16ம் தேதி தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாடு, வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ப்ரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். பல்வேறு தரப்பினரும் தங்களது AI துறை செயல்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக 600 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அங்கு அமைக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கிய கால்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் அரங்கு உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான மாநாட்டில், சீனாவில் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ டாகை தாங்கள் வடிவமைத்ததாக கூறி காட்சிப்படுத்தியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாம்.
மூட்டை, முடிச்ச கட்டிட்டு கிளம்புங்க..
அரசு தரப்பில் இருந்து வெளியான தகவல்களின்படி, ரோபோடாக் விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், பல்கலைக்கழகத்தின் அரங்கை உச்சி மாநாட்டில் இருந்து உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டதாம். சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த ரோபோடாகை தாங்கள் வடிவமைத்ததாக குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் பேராசியர் பேசிய வீடியோ வைரலான நிலையில், சீனா தொழில்நுட்பத்தை அவர் தங்களுடையது என உரிமைகோருவதாக இணையவாசிகள் பலரும் குற்றம்சாட்ட தொடங்கினர். ஐபிஎல் போட்டிகளில் ஏற்கனவே இதனை பயன்படுத்தி வருவதாகவும், அதை கூட உணராமல் தாங்களே புதியதாக வடிவமைத்ததாகவும் கூறுவதாக கடுமையாக விமர்சித்தனர். இணையத்தில் தேடி பார்த்ததில் ரூ.3 லட்சம் செலவிட்டால், இந்த ரோபோடாகை வாங்க முடியும் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
மாற்றிய உருட்டிய பல்கலைக்கழக நிர்வாகம்..
உச்சி மாநாட்டில் பல்கலைக்கழகம் தரப்பில் ரோபோடாக் குறித்து பேசப்பட்ட வீடியோ வைரலாக, நாலாபுறத்தில் இருந்தும் விமர்சனங்கள் அதிகளவில் குவிய தொடங்கின. உடனடியாக அந்த ரோபோடாக் எங்கு உருவாக்கப்பட்டது என்பதை தவறாக சித்தரிக்க நாங்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சீனாவை சார்ந்த நிறுவனத்திடமிருந்தே அந்த ரோபோடாக் வாங்கப்பட்டது. கல்வி மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக மட்டுமே அந்த பொம்மை கொண்டு வரப்பட்டது. இந்த ரோபோடாகை கால்கோடியாஸ் உருவாக்கவும் இல்லை, அப்படி எங்கும் குறிப்பிடவும் இல்லை. இத்தகைய வடிவமைப்பை மேற்கொள்ளக்கூடிய மூளைகளை தான் கட்டமைத்து வருகிறோம்.” என க்ரேட்டர் நொய்டாவில் உள்ள அந்த பல்கலைக்கழகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆரம்பத்தில் வெளியான வீடியோவில் இந்த ரோபோவை தங்களது மாணவர்களே உருவாக்கியதாக பேராசிரியை ஒருவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு என்ன?
யுனிட்ரி Go2 ரோபோடிக் டாக் ஆனது ஓரியன் என்ற பெயரில் உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியை பேசிய வீடியோ வைரலாகவே, சர்வதேச தரத்திலான மாநாட்டில் இப்படி ஒரு மோசடியா? என பல்வேறு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. அதன்பிறகு அதனை தாங்கள் வடிவமைத்ததாக கூறவே இல்லை என மீண்டும் மீண்டும் விளக்கமளித்தது. இந்நிலையில் தான், அந்த அரங்கம் உச்சி மாநாட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பெருந்தலைவர்கள் பங்கேற்கும் நபர்களின் உண்மைத்தன்மையை கூட, முறையாக ஆராய மாட்டார்களா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அந்த ரோபோடாக் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, மிகவும் பெருமையாக உள்ளதாக மத்திய தொழில்நுட்ப அமைச்சர் அஷ்விணி வைஸ்ணவ் பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
























