ஒன்பது ஆண்டுகளில் 24.82 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர் என NITI ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



NITI ஆயோக் விவாத கட்டுரையின்படி, இந்தியாவில் பல பரிமாணங்களில் வறுமையானது 2013-14 இல் 29.17% இல் இருந்து 2022-23 இல் 11.28% ஆகக் குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 24.82 கோடி மக்கள் வறுமை கோட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.  தேசிய பரிமாண வறுமையானது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கியமான பிரிவுகளை கொண்டு இயங்குகிறது.


அவை 12 நிலையான வளர்ச்சி இலக்குகள்-சீரமைக்கப்பட்ட குறிகாட்டிகளால் குறிப்பிடப்படுகின்றன. ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, தாய்வழி ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு ஆண்டுகள், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை இதில் அடங்கும். நிதி ஆயோக்கின் தேசிய பரிமாண வறுமைக் குறியீடு (MPI) வறுமை விகிதங்களில் குறைவை மதிப்பிடுவதற்கு அல்கிர் ஃபாஸ்டர் முறையைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், தேசிய MPI 12 குறிகாட்டிகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் உலகளாவிய MPI 10 குறிகாட்டிகளை உள்ளடக்கியது. 


9 ஆண்டுகளில் 24 கோடி:


உத்தரப்பிரதேசத்தில், மாநில அளவில், 5.94 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியேறி முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து பீகாரில் 3.77 கோடி பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2.30 கோடி பேரும் வறுமை நிலையில் இருந்து முன்னேறி உள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய NITI ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், ஒவ்வொரு ஆண்டும் 2.75 கோடி பேர் பல பரிமாண வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளதாகவும், ஒன்பது ஆண்டுகளில் 24.82 பேர் வெளியே வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும், "பல்பரிமாண வறுமையை 1% க்கும் கீழே கொண்டு வர அரசு இலக்கு வைத்துள்ளது, அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று NITI ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் இந்தியா ஒற்றை இலக்க வறுமை நிலையை அடைய உள்ளது என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.