Andhra Pradesh: மகளுக்கு கேக் வாங்க முடியாத சோகம்.. அரசு ஊழியர் எடுத்த விபரீத முடிவு!
ஆந்திரப்பிரதேசத்தில் குழந்தையின் பிறந்தநாள் கேக் வாங்க தன்னிடம் பணம் இல்லாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் சுப்பிரமணியம் சிக்கிக் கொண்டார். அதனால் அம்மாவுக்கு போன் செய்து பேசியிருந்தார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மகளுக்கு பிறந்தநாள் கேக் வாங்க பணம் இல்லாததால் அரசு ஊழியர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரப்பிரதேச மாநிலம் ராமசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். 36 வயதான இவர் அம்மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பி. கொத்தகோட்டா நகர் பஞ்சாயத்தில் அலுவலகத்துக்கு அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே சுப்பிரமணியத்திற்கு சௌமியா என்ற மனைவியும், ஐஸ்வர்யா மற்றும் ஹிந்தவி என்ற இரு மகளும் உள்ளனர். இவர்களின் குடும்பம் ராமசமுத்திரம் பைபாஸ் சாலையில் வசித்து வந்தது.
இதனிடையே பிப்ரவரி 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுப்பிரமணியம் கர்நாடகாவின் நாகிரெட்டி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். நேற்று (பிப்ரவரி 9) அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் நான்காவது பிறந்தநாள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் காலை 7 மணிக்கு நாகிரெட்டி கிராமத்திலிருந்து பி. கோதகோட்டு அலுவலகம் புறப்பட்ட சுப்பிரமணியம் மாலையில் தான் வீட்டுக்கு வரும்போது கேக் வாங்கி வாங்கி வருவதாக தெரிவித்திருந்தார். இதனால் அவரது மகள் ஐஸ்வர்யா ஆசையோடு காத்திருந்தார்.
ஆனால் காலை 7.50 மணிக்கு ராமசமுத்திரத்தில் உள்ள தனது அம்மா நீலம்மாவிடம் தொலைபேசி வாயிலாக சுப்பிரமணியம் பேசியுள்ளார். அப்போது ஒருமாதிரி கனத்த குரலில் பேசியுள்ளார். என்னவென்று அம்மா கேட்டதற்கு ஏதேதோ சொல்லி சமாளித்துள்ளார். அதேசமயம் குழந்தையின் பிறந்தநாள் கேக் வாங்க தன்னிடம் பணம் இல்லாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் சுப்பிரமணியம் சிக்கிக் கொண்டார். அதனால் அம்மாவுக்கு போன் செய்து பேசியிருந்தார்.
மகன் பேச்சில் தடுமாற்றம் தெரிந்ததை உணர்ந்த நீலம்மா உடனடியாக மருமகள் சௌமியாவை தொடர்புக் கொண்டு விஷயத்தைக் கூறியுள்ளார். காலை 8 மணிக்கு தொடர்ச்சியாக சுப்பிரமணியத்திற்கு போன் செய்தும் அவர் எதையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சௌமியா செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி டைப் செய்துள்ளார்.
அதில், உனக்கும், குழந்தைகளுக்கும் நரகத்தை கொடுத்துவிட்டு நான் கிளம்புகிறேன்... மன்னிக்கவும் என சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதனை அனுப்பாமல் டிராஃப்டில் வைத்திருந்துள்ளார். இந்த நிலையில் தனது வீட்டில் சுப்பிரமணியம் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஊரிலிருந்து வீட்டுக்கு வந்த அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்தபோது தான் சுப்பிரமணியம் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தெரிய வந்தது. இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)























