மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானியில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 சமீப காலமாக தெரு நாய் மக்களை கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளை தெரு நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு சில குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் தெரு நாய் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பத்வானி பகுதியில் வசித்து வரும் சிறுவன் வீட்டிற்கு அருகே ஆட்டிறைச்சி சந்தை உள்ளது. இதனால் அப்பகுதியில் நாய் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் சம்வத்தன்று சிறுவன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளான். அப்போது தெரு நாய் சுற்றி வளைத்துள்ளது. பின் தெரு நாய்கள் சேர்ந்து அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளது. சத்தம் கேட்ட சிறுவனின் பாட்டி உடனடியாக ஒரு கொம்பை எடுத்து நாய்களை விரட்டி சிறுவனை மீட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டான்.


இந்த சம்பவத்தை அடுத்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து முனிசிபல் கார்ப்பரேஷன் சி.இ.ஓ. குஷால் சிங் துத்வே கூறும்போது, "நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெருநாய்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவற்றைப் பிடிப்பது சற்று கடினம். நாய்களை பிடிக்கும் போது, நாய் பிரியர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க எங்கள் தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் தெருநாய்களின் தாக்குதல்கள் மற்றும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 23-ம் தேதி மட்டும் குவாலியர் பகுதியில் தெருநாய்கள் ஒன்றிணைந்து 547 பேரை கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



இதேபோன்று சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பல பகுதியில் தெரு நாய்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆம்பூர் வாத்திமனை குப்பா மசூதி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவனை அங்கு சாலையில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று மாணவனை கடித்த நிலையில், உடனடியாக மாணவனை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி அளித்தனர். இப்படியான சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.