மருமகள் கொடூர டார்ச்சர்... 95 வயதில் தற்கொலை செய்து கொண்ட மாமனார் - இதெல்லாம் அநியாயம்!
மத்திய பிரதேசத்தில் மருமகளின் கொடுமை தாங்க முடியாததால் 95 வயது முதியவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது குவாலியர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் வசித்து வந்தவர் ராமதர் குப்தா. இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 95 வயதாகிறது. வயது மூப்பு காரணமாக இவரது வியாபாரத்தை இவரது மகன் சுரேஷ்சந்திரா குப்தா கவனித்து வருகிறார். ராமதர் குப்தா வயது மூப்பு காரணமாக தனது மகன் வீட்டிலே வசித்து வந்துள்ளார்.
95 வயது முதியவர் தற்கொலை:
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவரது குடும்பத்தினர் அனைவரும் அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வீட்டின் அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதனால், அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சத்தம் கேட்ட அறையின் உள்ளே சென்று பார்த்தபோது ராமதர் குப்தா தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காரணம் என்ன?
இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். அவர்கள் ராமதர் குப்தா தற்கொலை செய்து கொண்ட அறையை சோதனை செய்தனர். அப்போது, அவர்களுக்கு கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில் அவர் தனது தற்கொலைக்கு காரணம் தனது மூத்த மருமகள் சுனிதா என்று எழுதி வைத்துள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில் அவர்தனது மூத்த மருமகள் சுனிதா தன்னை நீண்ட காலமாக துன்புறுத்தி வந்ததாகவும், சாப்பாட்டில் அளவுக்கு அதிகமான காரம் மற்றும் உப்பைச் சேர்த்தே கொடுத்து வந்ததாகவும் தனது கைப்பட தற்கொலை கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
95 வயதான முதியவர் தன்னுடைய மருமகள் கொடுமை தாங்க முடியாமல் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சிக்கல், பாசமின்மை காரணமாக முதியவர்களை பாரமாக பார்க்கும் மனப்பான்மை இந்திய குடும்பங்களில் அதிகரித்து வருகிறது.
அதிகரிக்கும் குடும்ப வன்முறை:
இதனால், இந்தியாவில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல வசதிபடைத்த குடும்பத்தாரும் தங்களது வீட்டில் உள்ள முதியவர்களை இதுபோன்ற முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் அவல நிலையும் அரங்கேறி வருகிறது.
வீட்டில் உள்ள முதியவர்களை முறையாக பராமரிக்க குடும்பங்களில் நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கும், குழந்தைகளுக்கும் உரிய ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்க வேண்டும் என்று மனநல ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.























