தமிழ்நாட்டில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “தமிழ்நாட்டில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தயவு செய்து அனைவரும் முக கவசம் அணியுங்கள். சமூக இடைவெளி, முக கவசம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த உதவும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்றார்.




மேலும் அவர் கூறுகையில், “மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். 50க்கும் மேற்பட்ட இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகள் தயாராக உள்ளன. கொரோனாவுக்கு எதிராக போர் வீரர்களை போல் தற்போது மருத்துவ பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். வாக்காளர்கள் முக கவசம் அணிந்து வருவதை தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.