தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் அடுத்த இண்டமங்கலம் ஊராட்சியில் உள்ள இண்டமங்கலம் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் 1000-க்கும் மக்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடும் வறட்சி காரணமாக கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. மேலும்  ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் கூட, இந்த கிராமத்திற்கு வருவதில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக வேண்டி 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர்-தருமபுரி நெடுஞ்சாலையில் சீராம்பட்டியில் உள்ள ஒகேனக்கல் தண்ணீர் பிடிக்கும் இடத்திற்கு சென்று குடிநீர் கொண்டு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் கிராமமக்கள் கூலி வேலை செய்து வருவதாலும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருவதால், குடிநீர் தேடி அலைந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.


இது சம்மந்தமாக நாங்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடமும், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கிராம மக்களுக்கு தண்ணீர் வசதி கிடைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளனர். அப்பொழுது அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பெண் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.


இந்த மனுவில், காரிமங்கலம் அடுத்த இண்டமங்கலம் காலனி பகுதிக்கென்று தனியாக இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டிகள் முழுமையாக வேலை நடைபெறாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதில் தெருக்களுக்கு குழாய் இணைப்பு கூட வழங்கப்படவில்லை. எனவே எங்கள் இண்டமங்கலம் காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமரிப்பு வேலை செய்து அதற்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்து தண்ணீர் வழங்கவும், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் மூலம் இணைப்பு வழங்கி குடிநீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். மேலும் குடிநீர் வசதி வழங்கப்படவில்லையென்றால், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடிநீர் கேட்டு, பெண்கள் கிராமமக்கள் காலி குடங்களுடன் மனு அளிக்க வந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.